வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்றையதினம்(30) நடாத்தப்பட்டுள்ளது.
யாழ். கிட்டு பூங்கா முன்றலில் நேற்று காலை 10 மணியளவில் ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்து பேரணியாக மனிதப் புதைகுழி காணப்படும் செம்மணிப் பகுதிக்கு அண்மையாகச் சென்று நீதி கோரிக் கோஷமிட்டனர்.
சர்வதேச விசாரணை
“தமிழின அழிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகளுக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்” என்று அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.