ரஷ்யா, ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் உக்ரைன் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனான சந்திப்பிற்கு என ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவிடம் இருந்து டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை பெறுவது குறித்து விவாதிக்க ஜெலென்ஸ்கி ட்ரம்பை சந்திக்க இருக்கிறார்.
இந்த நிலையிலேயே, வியாழக்கிழமை அதிகாலை ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டசின் கணக்கான ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது.
உக்ரைனின் எரிசக்தி
இதனால் உக்ரைனின் எட்டு பிராந்தியங்களில் மின் தடைகள் ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் எரிசக்தி அமைப்பை குறிவைத்து மற்றொரு பெரிய அளவிலான குண்டுவீச்சுத் தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிடுகையில், ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களையும் 37 ஏவுகணைகளையும் ஏவியது, அவற்றில் கணிசமான எண்ணிக்கை பாலிஸ்டிக் ஏவுகணைகள் எனவும் பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்த இலையுதிர்காலத்தில், ரஷ்யா ஒவ்வொரு நாளும்உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்குவதையே இலக்காக கொண்டுள்ளது.
2022 இல் உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து, ரஷ்யா ஒவ்வொரு குளிர்காலத்திலும் உக்ரைனின் மின் உள்கட்டமைப்பைத் தாக்கி வருகிறது. இதனால் அவசர மின் தடைகள் அறிவிக்கப்படுவதுடன், வெளிநாடுகலில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நிலைக்கும் உக்ரைன் தள்ளப்படுகிறது.
சமீபத்திய ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனின் எரிவாயு உற்பத்தியில் சுமார் 60 சதவீதம் நிறுத்தப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. மேலும், மின் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உக்ரைனில் லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சார விநியோகத்தைத் துண்டித்தமை குறிப்பிடத்தக்கது.