ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மதுகமவைச் சேர்ந்த குறித்த பெண்ணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
அந்த பெண் நீதிமன்றத்தின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வீட்டின் உரிமையாளர் கைது
மதுகம – வெலிபென்னவைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளரான 52 வயதுடைய அவர் இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளதாக தெரியவந்த நிலையில் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

”கணேமுல்ல சஞ்சீவ” என்றும் அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி சமீபத்தில் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்தநிலையில் நேபாளத்தில் கடந்த 14ஆம் திகதி கைதாகிய இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட அறுவரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
