கனடாவை வசிப்பிடமாகக் கொண்டவரும், யாழ் தீவகப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவருமான 62 வயது கதிர்காமதம்பி குகநேசன், தாய்லாந்தின் Khao Yai National Park பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தாய்லாந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவியை குறித்த விடுதியில் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதை மேற்கொண்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மனைவி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸ் விசாரணைகளின் போது, சம்பவம் தற்செயலானதல்ல என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குகநேசன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கனடாவில் வசித்து வரும் அவர்களின் பிள்ளைகளுக்கு பொலிசாரால் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, குடும்பத்தின் மூத்த மகன் தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவத்திற்கு முன்னர் இயற்கை மூலிகை என அறிமுகப்படுத்தப்பட்ட kratom எனப்படும் ஒரு பொருளை பயன்படுத்தியதாக மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், எனினும் அந்தப் பொருள் மிகுந்த போதைப்பொருள் அல்ல என பொலிசார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குகநேசனும் அவரது மனைவியும் நீண்ட காலமாக வெளிநாடுகளில் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வந்தவர்களாகவும், இதற்கு முன்னர் குடும்பத் தகராறுகள் எதுவும் அறியப்படவில்லை என்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் சுற்றுலா சென்றிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாய்லாந்து பொலிசார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்
