நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதனை ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கணேசன் விக்னராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025 முதல் 2030 எனும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வறுமைப் பகுப்பாய்வு நிலையம் மற்றும் ODI Global நிறுவனத்தின் அனுசரணையில் சுயாதீனக் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் எனும் அறிக்கை கொழும்பு மன்றக் கல்லூரியில், அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், இலங்கையின் நெருக்கடிக்குப் பின்னரான மீட்சிக்கான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மற்றும் வறுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் கொள்கைக் கட்டமைப்பு, இந்த அறிக்கையின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் உறுதியான பொருளாதார நிலையை உருவாக்க இதுவரை முடியவில்லை என்று, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் இவெட் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
எனவே, அரசாங்கம் தலையிட்டு தனியார்த் துறையையும் இணைத்துக்கொண்டு ஒரு தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
