முன்னர் கூடுதல் வட்டி என சொல்லி போலி அப்புக்களை உருவாக்கி நிறைய மக்களிடம் இருத்து பணங்களை மோசடி செய்ததை நாம் அறிந்ததே?இப்பொழுது பிரித்தானியாவில் AIயால் பரவும் புதிய மோசடி ; புலம்பெயர் தமிழர்களுக்கான எச்சரிக்கை
பிரித்தானியாவில் தொலைபேசி மோசடிக்காரர்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரது குரலை அப்படியே நகலெடுத்து அவர்களது உறவினர்களை ஏமாற்றும் புதிய மோசடி யுக்தியை கையாண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் குறுகிய வீடியோக்கள் அல்லது வாய்ஸ் மெசேஜ்களை பயன்படுத்தி, வெறும் சில நொடிகளில் ஒருவரின் குரலை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, பாதிக்கப்பட்டவரின் குரலில் பேசிச் “நான் விபத்தில் சிக்கியுள்ளேன்” அல்லது “அவசரமாக பணம் தேவை” எனக் கூறி உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதே இந்த மோசடிக்காரர்களின் நோக்கமாகும்.

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் வீடியோக்கள் அல்லது அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களிலிருந்து மூன்று செகண்ட்கள் அளவிலான குரல் பதிவு கிடைத்தாலே போதுமானது என தெரிவிக்கப்படுகிறது.
பெறப்பட்ட குரல் மாதிரியைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட நபரைப் போலவே பேசக்கூடிய ஒரு போலி குரலை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்குகின்றனர்.
“நான் விபத்தில் சிக்கியுள்ளேன்”, “பொலிஸார் என்னை கைது செய்துவிட்டார்கள்”, “எனது தொலைபேசி தொலைந்துவிட்டது” போன்ற அவசர நிலைகளை கூறி, உடனடியாக பணம் அனுப்புமாறு உறவினர்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
குரலின் உச்சரிப்பு, பேசும் பாணி மற்றும் தனித்துவமான சத்தம் வரை ஒரே மாதிரியாக இருப்பதால், பலர் பதற்றத்தில் உண்மையை உறுதிப்படுத்தாமல் பணத்தை அனுப்பி ஏமாந்து விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உறவினர் குரலில் பேசினாலும், பணம் கேட்கப்படும் போது உடனடியாக நம்பாமல், அழைப்பை துண்டித்து அந்த நபரின் உண்மையான தொலைபேசி எண்ணுக்கு நீங்களாகவே அழைத்து உறுதிப்படுத்த வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களுக்குள் மட்டும் தெரிந்த ஒரு ரகசிய வார்த்தையை முன்கூட்டியே ஏற்படுத்திக் கொள்வது அவசர அழைப்புகளின் உண்மைத்தன்மையை அறிய உதவும்.
இந்த புதிய ஏ.ஐ. அடிப்படையிலான மோசடிகள் குறித்து மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
