இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நோர்வே அரசு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
அத்துடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட விடயங்களில் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் நோர்வே வலியுறுத்தியுள்ளது.
நோர்வே நாடாளுமன்றத்தில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற விசேட விவாதத்தின் போதே நோர்வே வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இதனை குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்னம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நில அபகரிப்பு குறித்து எழுப்பப்படும் கேள்வி
அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
“2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இலங்கையில் ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு ஊழல் ஒழிப்பு, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இந்த மாற்றங்களை நோர்வே வரவேற்கின்றது.

இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும் பல சவால்கள் நிலவுகின்றன என்பதை நாம் அறிவோம். குறிப்பாக நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை
இது தொடர்பாக நாம் இலங்கை அரசுடன் நேரடியாகக் கலந்துரையாடி வருகின்றோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகள் நியாயமான முறையிலும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதில் நோர்வே உறுதியாக உள்ளது.

மேலும், உண்மை கண்டறியப்படும் போது மாத்திரமே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும். இலங்கையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களுக்கு நோர்வே தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னரான விசாரணைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.
இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இன்றுவரை தொடரும் இனவாதம்
இதேவேளை கருத்து தெரிவித்த கம்ஷாயினி குணரத்னம், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால், யுத்தம் முடிவடைவது என்பது மோதல்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாகப் பொருள் கொள்ளாது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள், குறிப்பாக செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் கடந்த காலத்தின் கொடூரங்களை நினைவூட்டுகின்றன.

அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரது எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தற்செயலான நிகழ்வல்ல, மாறாக பல தசாப்தங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதைகளுடன் இது தொடர்புடையது.
இலங்கையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் சர்வதேச மட்டத்தில் ஒரு புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்தன. குறிப்பாக, புதிய அரசு ஊழலுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு மற்றும் அரசியல் சீர்திருத்தம் குறித்த வாக்குறுதிகள் அந்த நம்பிக்கைக்குக் காரணமாக அமைந்தன. இருப்பினும், அந்த வாக்குறுதிகள் உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.
தமிழர் வாழும் பகுதிகளில் இன்றும் இந்துக்கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், பௌத்த விகாரைகள் நிறுவப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. வடக்கு மற்றும் கிழக்கில் புதிய மனிதப் புதைகுழிகள் கண்டறியப்படுவதும், நிலங்கள் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதும் கவலையளிக்கின்றது என்றார். என்றார்.