நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:00 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த வெடிப்புச் சம்பவம், தூதரகத்தின் தூதரகப் பிரிவு (Consular section) நுழைவாயிலில் நிகழ்ந்ததாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறிய சேதங்கள்
இந்த விபத்தினால் கட்டடத்தின் ஒரு பகுதிக்குச் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும், அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் பதிவாகவில்லை.

வெடிப்பின்போது பெரும் சத்தம் கேட்டதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், அதனைத் தொடர்ந்து மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சகிதம் தானியங்கி ஆயுதங்களை ஏந்திய காவல்துறையினர் அப்பகுதியை முழுமையாகச் சூழ்ந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் நோர்வே காவல்துறையினர், என்ன வகையான பொருள் வெடித்தது அல்லது இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
இராணுவ நடவடிக்கை
விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கு உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், நோர்வேயில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கு மோதலுடன் தொடர்புடையதா என்பது குறித்துக் காவல்துறையினர் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தற்போது அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
