துபாயில் உள்ள உக்ரைனிய வான் பாதுகாப்பு கிடங்கு ஒன்று அழிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
உக்ரைனின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெர்ஹி திக்கி, பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்த அறிக்கையை மறுத்துள்ளார்.
“இது ஒரு பொய். இந்த அறிக்கையை நாங்கள் அதிகாரபூர்வமாக மறுக்கிறோம். ஈரானிய ஆட்சி இதுபோன்ற தவறான தகவல் பரப்பும் நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொள்கிறது, மேலும் இந்த விஷயத்தில் ரஷ்யர்களிடமிருந்து அது வேறுபட்டதல்ல,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பல வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வரும் வேளையில் இந்த தகவல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
துபாயில் உக்ரைனுக்கு சொந்தமான ட்ரோன் எதிர்ப்பு களஞ்சியத்தை தாக்கி அழித்ததாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் (IRGC) கீழ் செயல்படும் கதம் அல்-அன்பியா தலைமையகம் இதனை அறிவித்துள்ளது.
அதன்போது, “அமெரிக்க இராணுவ தளபதிகள் மற்றும் படையினர் தங்கியிருந்த இடங்கள் இலக்காக எடுக்கப்பட்டபோது, அமெரிக்க படைகளுக்கு உதவுவதற்காக உக்ரைன் சார்பில் துபாயில் அமைக்கப்பட்டிருந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு களஞ்சியம் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கியின் விஜயம்
இந்த நிலையில், எதிர்பாராத விதமாக தாக்குதல் நடந்த நாளிலேயே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது விஜயத்தின் போது, உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானின் இந்த அறிவிப்பு மற்றும் தாக்குதல் தொடர்பான தகவல்கள், மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்யக்கூடியதாகக் கருதப்படுகின்றன.
