மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு, இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மூடிய அறைக்குள் நடைபெற்றது.

இவ்விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பிரதான சந்தேகநபர்களும், நீதிமன்றில் இருந்த ஏனையோர் வெளியேற்றப்பட்டு, மூடிய அறைக்குள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

கடத்தப்பட்டு கிணற்றில் போடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட பெண் முன்னிலையிலேயே இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மட்டக்களப்பையே உலுக்கிய கடத்தல் சம்பவத்தில் அதிரடித் திருப்பம் | Dramatic Twist Kidnapping Incident Rocd Batticaloa

இதன்போது, முதலாவது அடையாள அணிவகுப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், இரண்டாவது அணிவகுப்பில் மூன்றாவது சந்தேகநபரும் சாட்சியால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு, கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

அதே கிணற்றிலிருந்து ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், அந்த இளம் தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் நேரடி கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்படி, இச்சம்பவம் தொடர்பில் காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் அவரது 22 வயதுடைய சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி மற்றும் திருகோணமலை வீதிப் பகுதியைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்களும் மற்றும் மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொடுத்த முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட ஆறு பேர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பையே உலுக்கிய கடத்தல் சம்பவத்தில் அதிரடித் திருப்பம் | Dramatic Twist Kidnapping Incident Rocd Batticaloa

மேலும், இவர்களிடமிருந்து இரண்டு முச்சக்கவரண்டிகள், ஒரு கார், கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டனர்.

மயக்க மருந்துகளை விநியோகித்ததாகக் கூறப்படும் ஏழாவது சந்தேகநபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வத்தளை பகுதியில் வைத்து தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.தர்சினி நேற்று அனுமதி வழங்கினார்.

தற்போது கொக்கட்டிச்சோலை பொலிஸாரும், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments