பட ஆய்வுகள், அதிகாரப்பூர்வ கருத்துக்கள் மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி, அமெரிக்கா இந்தப் போரில் இதுவரை குறைந்தது 9 விமானங்களை இழந்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவின் எஃப் 15 ஸ்டிரைக் ஈகிள் விமானம் இரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு கண்டறிவதற்கு கடினமான, வெப்பத்தை இலக்காகக் கொண்டு தாக்கும், நடமாடும் தளத்தில் இருந்து ஏவப்பட்ட தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணையே காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.
திங்கள்கிழமை இரவு, அதிபர் டொனால்ட் டிரம்ப் தோளில் வைத்து ஏவக்கூடிய வெப்பத்தை இலக்காகக் கொள்ளும் ஏவுகணை இதில் சம்பந்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். மேலும் இது அவர்களுக்கு (இரான்) ”அதிர்ஷ்டவசமாக அமைந்தது” என்றும் அவர் விவரித்தார்.
வழக்கமாக விமானிகள் இரண்டு வகையான ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். ஒன்று ரேடார் மூலம் வழிநடத்தப்படுபவை, மற்றொன்று அகச்சிவப்பு கதிர்கள் (வெப்பம்) மூலம் இலக்கைத் தொடர்பவை.
முதலாவது வகை ஏவுகணையால் ஒரு போர் விமானம் குறிவைக்கப்பட்டால், அந்த ரேடார் கதிர்வீச்சை விமானத்தில் உள்ள மின்னணு அமைப்புகள் கண்டறிந்துவிடும். இது குறித்து விமானிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் ஒலியெழுப்பியும், திரையில் அதன் இருப்பிடத்தைக் காட்டியும் எச்சரிக்கும்.
இதற்கான ஆரம்பகால அமைப்பு TEWS (Tactical Electronic Warfare Suite) என்று அழைக்கப்பட்டது, இது பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
ஆனால் வெப்பத்தை இலக்காகக் கொள்ளும் ஏவுகணைகள் ரேடார் சிக்னல்களை வெளியிடுவதில்லை.
இதனால் விமானிகள் தங்கள் சொந்தக் கண்களால் பார்ப்பதைத் தவிர, இந்த ஏவுகணைகளைக் கண்டறிவது மிகவும் கடினம்
