யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தி காவல்துறையினரால் தடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என மருதங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த ஊர்திப் பயணம் தொடர்பாக முறையான முன் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.
இதன் காரணமாக, பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மாத்திரம் ஊர்தி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு உரிய விசாரணைகள், சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் ஊர்தி தனது பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.
ஊர்தி தடுக்கப்பட்ட விவகாரம்
தவறான புரிதல் காரணமாகவே ஊர்தி தடுக்கப்பட்டதாகச் செய்திகள் பரவியது, சட்ட ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என தெரிவித்தார்.

இதேவேளை அன்னை பூபதியின் 38வது நினைவாண்டினை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தியானது கடந்த 9ஆம் திகதி நல்லூர் – தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

