ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தல் குறித்து பாப்பாண்டவருக்கு எதுவும் தெரியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான போர் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக பாப்பாண்டவர் 14-ஆம் லியோ (Pope Leo XIV) வழங்கிய கருத்துக்களை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், “பாப்பாண்டவருக்கு தற்போதைய நிலவரம் குறித்து எதுவும் தெரியாது என்றும், போரைப் பற்றி அவர் பேசக்கூடாது” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
மேலும், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலின் தீவிரத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் டிரம்ப் சாடினார்.
இந்த விவகாரத்தில் பாப்பாண்டவருக்கு ஆதரவாகப் பேசிய இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியையும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
பாப்பாண்டவர் குறித்த டிரம்ப்பின் விமர்சனங்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என மெலோனி கூறியதற்குப் பதிலடி கொடுத்த டிரம்ப், “மெலோனி தான் ஏற்றுக்கொள்ள முடியாதவர், ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால் அவர்கள் அடுத்த இரண்டு நிமிடங்களில் இத்தாலியைத் தகர்த்துவிடுவார்கள் என்பதை அவர் உணரவில்லை” என்று விமர்சித்தார்.
முன்பு மெலோனியைத் துணிச்சலானவர் என்று பாராட்டிய டிரம்ப், தற்போது அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும், ஈரான் உடனான போரில் இத்தாலி போதிய ஆதரவு அளிக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
தன்னைப் பற்றிய டிரம்ப்பின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிரதமர் மெலோனி, நட்பு நாடுகளாகவும் மூலோபாய பங்குதாரர்களாக இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அதனைச் சுட்டிக்காட்டும் தைரியம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் நலனுக்காகவே அவர் குறிப்பிட்டுள்ளார்
