ஏ – 9 வீதியின் பூனேவ, கல்கந்தேகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய லொறி மீது, உரம் ஏற்றிக்கொண்டு வந்த பெரிய கொள்கலன் லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஏற்பட்ட கோர விபத்தில், நுரைச்சோலை – இலந்தடி பகுதியைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இன்று(17.06.2026) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பூனேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி

இந்த விபத்தில், நுரைச்சோலை இலந்தடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வர்ணகுலசூரிய அன்டன் விராஜ் பெர்னாண்டோ (வயது 46) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ருமேஷ் பிரியங்கர (வயது 35) ஆகிய இருவருமே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர்களாவர்.

இலந்தடி பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், தனது பணியாளர்கள் குழுவுடன் யாழ்ப்பாணப் பகுதிக்குக் கடல் அட்டை பிடிக்கும் தொழிலுக்காகச் சிறிய லொறி ஒன்றில் சென்று கொண்டிருந்தார்.

அதிகாலை வேளையில் பூனேவ பொலிஸ் நிலையத்துக்கு அருகில் அவர்கள் பயணித்த லொறியைப் பூனேவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சோதனைகளுக்காக நிறுத்தியுள்ளனர்.

அப்போது, அவர்களுக்குப் பின்னால் உரம் ஏற்றிக்கொண்டு வந்த பெரிய கொள்கலன் லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக, லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறியின் மீது பயங்கரமான முறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்த தருணத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறியில் மொத்தம் 8 பேர் இருந்துள்ளனர்.

பெரிய கொள்கலன் பெட்டி லொறி மீது கவிழ்ந்ததில், அதில் சிக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணை

தலையில் பலத்த காயமடைந்த மற்றொருவர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

லொறியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஏனையோர் பெரும் முயற்சிக்கு மத்தியில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஏ - 9 வீதியில் கோர விபத்து! இரு குடும்பஸ்தர்கள் சாவு | Fatal Accident On A9 Road Two Members Family Die

எனினும், சிறிய லொறியில் வந்த வியாபாரி, விபத்து ஏற்படுவதற்குச் சில வினாடிகளுக்கு முன்னர் பொலிஸ் அதிகாரிகளிடம் வாகன ஆவணங்களைக் காண்பிப்பதற்காக லொறியை விட்டு வெளியே இறங்கிச் சென்றிருந்ததால், அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இந்தப் பயங்கர விபத்து பூனேவ பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையிலேயே அரங்கேறியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் மதவச்சியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளை அங்கு முன்னெடுப்பதற்குப் பொலிஸார் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

விபத்து குறித்துப் பூனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ - 9 வீதியில் கோர விபத்து! இரு குடும்பஸ்தர்கள் சாவு | Fatal Accident On A9 Road Two Members Family Die
ஏ - 9 வீதியில் கோர விபத்து! இரு குடும்பஸ்தர்கள் சாவு | Fatal Accident On A9 Road Two Members Family Die
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments