யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் தகவலின்படி, வலிகாமம் வடக்கு பகுதியில் இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயப் பயிர்ச்செய்கையிலிருந்து அறுவடை செய்யப்படும் சோளங்களே யாழ்ப்பாண நகருக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வலிகாமம் வடக்கில் பல குடும்பங்களின் சொந்த நிலங்கள் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் காணி விடுவிப்புக் கோரிக்கை ; சோள விற்பனையால் எழுந்த புதிய சர்ச்சை | Land Release Requ Jaffna New Controversy Over Sale

தங்களது வீடுகள் மற்றும் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல், பல குடும்பங்கள் வாடகை வீடுகளிலும் உறவினர்களின் இல்லங்களிலும் இடம்பெயர்ந்த வாழ்க்கையைத் தொடர்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த காணிகளில் படையினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறுவடை செய்யப்படும் சோளங்களை தங்களது வாகனங்களில் யாழ்ப்பாண நகருக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையால், யாழ்ப்பாண நகரில் சோள விற்பனையை நம்பி வாழும் சிறு வியாபாரிகள் கடுமையான சந்தைப் போட்டியை எதிர்கொள்வதுடன், தங்களது அன்றாட வருமானம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மக்களின் சொந்த நிலங்கள் இன்னமும் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில், அவற்றைப் பயன்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுவது தங்களுக்கு வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, படையினரின் வியாபார நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதுடன், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் காணிகள் தொடர்பிலும் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை இராணுவம் அல்லது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments