பாரம்பரிய உணவு வகைகளையும் உலகறியச் செய்யும் நோக்கில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது.

விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான சன நெரிசலைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாளை ஞாயிற்றுக்கிழமையும், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள்

உணவே மருந்து – மருந்தே உணவு’ என்ற ஆரோக்கிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உணவுத் திருவிழாவில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாரம்பரிய உணவு வகைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

பாரம்பரிய உணவுகளை ருசிக்க திரண்ட மக்கள் ; அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா இடைநிறுத்தம் | Reecha Akshaya Pattharam Food Festival Suspended

ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்திருந்தனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன், கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களும் பெருமளவில் விழாவில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை மற்றும் தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் ‘அட்சய பாத்திரம்’ உணவுத் திருவிழா அண்மையில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மேலும், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழா ஆரம்பமானதைத் தொடர்ந்து, பாரம்பரிய உணவு வகைகளை ருசிப்பதற்கும், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் பெருமளவான மக்கள் றீச்ஷா வளாகத்தில் திரண்டிருந்தனர்.

பாதுகாப்பு கருதி நிகழ்வுகள் இரத்து

இந்நிலையில், எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் ஒரே நேரத்தில் விழா வளாகத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், இன்று நடைபெற்று வந்த உணவுத் திருவிழா இடைநடுவே நிறுத்தப்பட்டதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், நாளை மற்றும் அதற்கு அடுத்த நாளில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் என றீச்ஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நுழைவுச்சீட்டுகளுக்காக செலுத்தப்பட்ட பணம், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் ஊடாக முறையாக மீளச் செலுத்தப்படும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம்’ உணவுத் திருவிழா, எதிர்பாராத அளவிலான மக்கள் திரளால் பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments