இலங்கையின் இணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத வகையில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று (22) திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றின் போது இவ்வாறு கோரியுள்ளனர்.
இங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அப்பகுதி மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நில உரிமை, மொழி உரிமை மற்றும் சமூக–பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
சமஷ்டி அரசியல் தீர்வு
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலை தொடர்கின்றது, எனவே எதிர்காலத்தில் மாற்ற முடியாத மற்றும் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட சமஷ்டி அரசியல் தீர்வே அவசியம்.
மேலும், வடக்கு – கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி நிலையான அரசியல் தீர்வை உருவாக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம்.” என தெரிவித்தனர்.
நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாட்கள் செயல்முனைவின் நான்காவது வருட அணி திரளல் நிகழ்வான இந்த நிகழ்வில் சிவில் சமூக பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
