சர்க்கரை இல்லா சூயிங்கத்தில் பயன்படுத்தப்படும் சைலிட்டால் (Xylitol) குறித்து புதிய ஆய்வு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதிக அளவு சைலிட்டால் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் சாரிட்டே பல்கலைக்கழக மருத்துவமனை ஆய்வாளர்கள் 17,710 பேரின் தரவுகளை ஆய்வு செய்ததில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.
இதயநோய் பாதிப்பு
இரத்தத்தில் சைலிட்டால் அளவு அதிகமாக இருந்தவர்களுக்கு இதய நோய் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருந்ததாகவும், ஆறு ஆண்டுகள் கண்காணிப்பில், அதிக சைலிட்டால் அளவு கொண்டவர்களுக்கு முக்கிய இதயநோய் பாதிப்பு 57% அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவு சைலிட்டால் இரத்தத்தை அடர்த்தியாக்கி, ஆபத்தான ரத்தக் கட்டிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
சைலிட்டால் குறைந்த கலோரியுடன் இனிப்புச் சுவை தருவதால் சூயிங்கம், புதினா இனிப்புக்கள் உள்ளிட்ட பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
பல் சொத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைப்பது போன்ற பல் ஆரோக்கிய நன்மைகளும் இதற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், சைலிட்டாலின் நீண்டகால இதய ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சைலிட்டால் கொண்ட பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
