ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு வைகாசிப் பொங்கல் விழா எடுக்கப்படுகின்றது. பல லட்சம் மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் எடுப்பது பன்னெடுங்காலமாக திகழ்கின்ற வழக்காகும். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்று ஆதாரமாக  இந்த ஆலயம் விளங்குகிறது.  இந்த ஆலயம் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் பகுதியில் ஈழ இறுதிப் போர் இடம்பெற்றிருந்தது. இறுதிப்போரின்போது தமிழ் மக்கள் சந்தித்த அவலங்களின் சாட்சியாகவும் கண்ணகி விளங்குகிறாள்.  

ஆலய வழிபாடுகள் பண்பாடாக இருக்கும் அதே சமயத்தில் ஆற்றுப்படுத்தல் மையங்களாகவும் உள்ளன. 2009  ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில், ஈழ மக்கள் தமது மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் இடமாகவும் இவ் ஆலயம் அமைந்துள்ளது.

மதுரையிலிருந்து வந்த கண்ணகி

இந்த ஆலயம் சிலப்பதிகார காலத்துடன் தொடர்புடையது. குற்ற மள்ள கோவலனை பாண்டிய மன்னன் கொன்றபோது ஆத்திரமடைந்த கண்ணகி அவனடம் நீதி கேட்டு வழக்குரைத்தாள். பின்னர் குற்றத்தை பாண்டிய மன்னன் ஒப்புக்கொள்ள மதுரையை சாபமிட்டு எரிப்பதாக சிலப்பதிகார காப்பியம் கூறுகிறது. மதுரையை ஆவேசத்துடன் எரித்த கண்ணகி மதுரையை விட்டு வெளியேறி ஈழத்திற்கு வந்து பத்து இடங்களில் ஆறியதாக நம்பப்படுகிறது. பத்தாவது இடமாக வற்றாப்பளை அமைந்ததை காரணமாக பத்தாப்பளை என்பது பின்னர் மருவி வற்றாப்பளையாக பெயர் பெற்றது என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. 

ஈழத்தவரின் பண்பாட்டு நாயகி… இறுதிப்போரின் சாட்சி வற்றாப்பளைக் கண்ணகிக்குப் பொங்கல் | Pongal For The Vattapalail Kannagi

 நீர் நிறைந்த நந்திக்கடலோரம் வந்த கண்ணகி ஒரு மூதாட்டியின் தோற்றத்தில் வந்து ஆடு மேய்க்கும் இடையச் சிறுவர்களிடத்தில் பசிக்கிறது என்றும் உணவு தருமாறும் கேட்டார் என்றும் தலையில் நிறைய பேன் உள்ளது அதனை எடுக்குமாறு கூறியபோது தலைமுழுவதும் கண்கள் இருந்ததாகவும் அதனால் கண்ணகி என்று உணர்ந்ததாகவும் இந்த ஆலயம் குறித்த ஐதீக கதைகள் கூறுகின்றன.

இதேவேளை அச் சிறுவர்கள் பாற்சோறு காய்சிச கொடுப்பதற்காக அந்த மூதாட்டியை தேடியபோது அவள் மறைந்துவிட்டதாகவும் அந்த இடத்தில் பாற்புக்கையை படைத்த அந்த நாளே வைகாசி விசாக நாள் என்றும் ஆண்டுதோறும் அந்த நாளில் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பொங்கல் எடுக்கப்படுகிறது.

கிராமிய மக்களின் தாய் கண்ணகி

தமிழ்நாட்டில் கண்ணகி வழிபாடு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதுடன் ஈழத்தின் பல பகுதிகளிலும் கண்ணகிவழிபாட்டிற்கு முக்கிய அடம் காணப்படுகின்றது. இது இரண்டு நாட்டுப் பண்பாடுகளையும் இணைக்கும் தொடர்பாகும். வன்னிப் பிரதேச மக்களின் கிராமிய வழிபாட்டுடன் தொடர்புடைய வற்றாப்பளை அம்மன் ஆலயம் இயற்கை சார்ந்த வழிபாடாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நந்திக்கடல் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் பண்டைய ஈழத்து வன்னி மன்னர்களின் ஆட்சிக்காலத்துடன் தொடர்புடையது.

ஈழத்தவரின் பண்பாட்டு நாயகி… இறுதிப்போரின் சாட்சி வற்றாப்பளைக் கண்ணகிக்குப் பொங்கல் | Pongal For The Vattapalail Kannagi

பல நூற்றாண்டுகள் தொன்மையுடைய இந்த ஆலயம் ஏழை மக்களின் ஆலயமாகவும் உழைக்கும் மக்களின் ஆலயமாகவும் அடையாளம் பெறுகிறது. அத்துடன் தமிழர்களின் பண்டைய வழிபாட்டு முறைகளில் ஒன்றான தாய்த் தெய்வ வழிபாட்டு முறையையும் பிரதிபலிக்கிறது. தாய் தெய்வ வழிபாடு என்பது உன்னதமான ஒழுக்க நெறியாகவும் முன்னிலை பெறுகிறது.

இந்த ஆலயத்தை மையப்படுத்தி கோவலன் கூத்து, கண்ணகி கூத்து என்பன ஆடப்படுகின்றன. வை இந்த மக்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்த கிராமிய கலை வடிவங்களாகும். இன்றைய தினம் பொங்கல் விழாவில் இந்த ஆலயம் குறித்த பண்டைய இலக்கியகப் பாடல்கள் பாடப்படுகின்றன. அவை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் கிராமிய மொழியில் அமைந்திருந்தது

தீர்த்தமெடுக்கும் நிகழ்வு

முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து பக்தர்கள் புடைசூழ  சிலாவத்தைக் கடலில் தீர்த்தம் எடுப்பதற்காக புறப்படுவார்கள். பொங்கல் நடைபெறப் போகின்றது என்பதை உபகரிப்புக்காரருக்கும் பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத் தெண்டல் நிகழ்வு  முதல்வாரம் இடம்பெறும். பாக்குத் தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வர். தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத் துணியால் கட்டியிருப்பர். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர்.

ஈழத்தவரின் பண்பாட்டு நாயகி… இறுதிப்போரின் சாட்சி வற்றாப்பளைக் கண்ணகிக்குப் பொங்கல் | Pongal For The Vattapalail Kannagi

 கடலில் இறங்கி வாயூறு நீர்வரைக்கும் சென்று நிற்பர். பாத்திரத்தைத் தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் தண்ணீரால் நிறைந்துவிடும். தண்ணீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப் பூசை செய்வர். அங்கிருந்து காட்டா விநாயகர் கோயிலை நோக்கிப் புறப்படுவர். அப்பொழுது கடற்கரை மண் சிறிதளவு எடுத்துத் துணியில் முடிந்துகொண்டு இன்னொருவர் செல்லத் தீர்த்தக்குடம் வரும்  வழிநெடுகிலும் மக்கள் பந்தலிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, நிறைகுடம் வைத்து வரவேற்பர். நிறைகுடப் பந்தல்களில் தரித்து நின்று இறுதியில் இரவு வேளை (சுமார் 9 மணியளவில்) காட்டாவிநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்துவிடுவர்.

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம்

அங்கு விசேட பூசை நடைபெறும். அந்தத் தருணம் அடிக்கப்படும் ஆலயமணியின் ஓசையும் பறை ஒலியும் சேர்ந்து பரவி அப்பகுதி மக்களை மெயசிலிர்க்க வைக்கும். தீர்த்தக்குடத்தை விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் மண்டபத்தில் இறக்கி வைப்பர். இரவு 10மணியளவில் அம்மன் மண்டபத்தில் கும்பம் வைத்து (அம்மன் கும்பம்), மடை பரவி, ஒரு மட்பாத்திரத்தில், கொண்டுவரப்பட்ட உப்புநீரை நிரப்பி, அதனைக் கடற்கரையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண்மீது வைத்துத் திரியிட்டு விளக்கேற்றுவர். தொடர்ந்து ஏழு நாள்கள் கடல்நீரில் விளக்கெரியும்.

ஈழத்தவரின் பண்பாட்டு நாயகி… இறுதிப்போரின் சாட்சி வற்றாப்பளைக் கண்ணகிக்குப் பொங்கல் | Pongal For The Vattapalail Kannagi

ஏழாவது நாள் இரவு விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நடைபெறும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு பொங்கல் பொருள்களுடன் கடல்நீரில் எரியும் விளக்கு என்பன வாத்தியங்களுடன்  வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். அன்று பகல் தொடக்கம் பூஜை வழிபாடுகள் இடம்பெறும். இரவு பொங்கல் இடம்பெறும்.  இதன்போது வடக்கு கிழக்கு எங்குமிருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து, வற்றாளைப்பளை ஆலயச் சூழலில் தங்கியிருந்து பொங்கல் செய்து அம்மனை வழிபடுவார்கள். ஈழத்தவரின் பண்பாட்டு நாயகி வற்றாப்பளைக் கண்ணகி இறுதிப்போரின் சாட்சியுமாக எம் வாழ்வுடன் இருப்பவள்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *