நுகேகொடையில் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் அரசாங்க எதிர்ப்பு பேரணி, அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மலர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, பல எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்களில் பங்கேற்றிருப்பதாகவும் நாமல் கூறியுள்ளார்.
அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
“கடந்த காலங்களில், பொதுஜன பெரமுனவுக்குள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் ஆனால் இன்று பேரணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதற்கும் அதன் வாக்குறுதிகளின் படி, செயல்பட ஊக்குவிப்பதையும் இந்த பேரணி நோக்கமாக கொண்டது என்று நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
அதன்படி, அரசாங்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பலர் பேரணியில் இணைவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பேரணியில் பங்கேற்க ஒப்பு கொண்டுள்ளதுடன், ஏனைய கட்சிகள் உள்ளக கலந்துரையாடல்களின் பிறகு தங்கள் ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.