இலங்கையில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தத் தான் தயாராக இருப்பதாகவும், நாட்டின் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்று யுகம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையைக் கட்டியெழுப்புவோம்
133 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியிலிருந்து 1948 இல் சுதந்திரம் பெற்றதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இதற்காக இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையைச் சிந்திய எமது முன்னோர்களை ஒருபோதும் மறக்க முடியாது என்றார்.

இந்த ஆண்டின் சுதந்திர தினக் கருப்பொருளான “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது எமது இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் பலம் எமது ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, எமது அகராதியிலுள்ள மிகவும் அவலட்சணமான இரண்டு சொற்கள் ‘இனவாதம்’ மற்றும் ‘தீவிரவாதம்’ ஆகும் என்றார். நாம் பிளவுபட்டால் எமது பலம் குன்றிவிடும்.
எமது நாட்டில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது தீவிரவாதத்திற்கோ இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு,” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முதல் இணைப்பு
78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் தற்போது சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகி உள்ளது.
“இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்களின் நேரடி ஒளிபரப்பு இன்று காலை 7.45 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.
அரசியல் முக்கியஸ்தர்கள்
தற்போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.
அத்துடன் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட பல நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் உள்நாட்டு பிரமுகர்கள் சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்துள்ளனர்.

