ஒரு நூற்றாண்டு காலமாய் ஈழத்தமிழர்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்கான போராட்டத்தில் அரசியல் வழியில் தொடர் தோல்விகளையே சந்தித்தனர்.

அதே நேரத்தில் ஆயுதப் போராட்டத்தில் சண்டைகளில் வெற்றிகளை குவித்த எம்மால் யுத்தத்தில் தோல்வியடைந்தோம். முள்ளிவாய்க்காலுக்கு பின் சர்வதேச அரசியலிலும் நாம் எந்த வெற்றியையும் அடையவில்லை. இந்தத் தொடர் தோல்விகளுக்கான காரணம் என்ன?

என்பதை கண்டறியாமல் வெற்றிக்கான பாதையையே கண்டறிய முடியாது. தோல்விக்கான காரணங்களை கண்டறிய நாம் தயார் இல்லை என்றால் நாம் மீண்டும் மீண்டும் தோல்விக்கான பாதையில் தொடர்ந்து பயணிக்கின்றோம் என்பதே உண்மையாகும்.

முள்ளிவாய்க்கால் பெருந் தோல்விக்கு பின் ஏற்பட்ட இனப்படுகொலையும், அந்த இனப்படுகொலைக்கான நீதிக்கான போராட்டத்திலும் ஈழத்தமிழர்கள் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகள் எதனையும் கடந்த 17 ஆண்டுகளாக அடையவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்த சர்வதேச அரசியல் தளத்தில் தமிழ் மக்களால் ஏன் வெற்றிநடைபோட முடியவில்லை.

தமிழர் தாயகத்தில் நடந்த இனப்படுகொலையை முதலீடாக்கி வெற்றிக்கான பாதைகளை திறப்பது இலகுவானதாயினும் அதனை நடைமுறை ரீதியில் அணுகுவதும், முன்னெடுப்பதும் சவால்கள் நிறைந்ததாகவேயுள்ளது. இதற்கான காரணங்கள் பற்றி ஆய்வது அவசியமானது. தாயக அரசியல் பரப்பில் தேசியம் பேசுகின்ற தமிழ் கட்சிகளும், தலைமைகளும் ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்பது முதலாவது பிரச்சினையாகும்.

 விடுதலைப் போராட்டம் 

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் கருத்தும், முன்மொழிவுகளும் முக்கியமானவை. ஆயினும் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் ஒரு சாரார் இனப்படுகொலை எனவும், மறுசாரார் யுத்த குத்தம் எனவும், இன்னொரு சாரார் பரிகார நீதியை என்றும், அபிவிருத்தி அரசியல் என்றும் பல்வேறு திசைகளில் பயணிப்பதனால் தமிழ்த் தேசியம் சிதைவுக்குள்ளாகி இருக்கிறது.

தமிழ் அரசியல் தலைமைகள் தங்களுக்குள் ஐக்கியப்படாமல், ஒத்த கருத்தியலுக்கு வராமல் எந்த ஒரு அரசியல் முன்னெடுப்பையும் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ முன்னெடுக்க முடியாது. இதுவே முக்கியமான தடைக்கல்லாகவும், தமிழ் மக்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தின் பாதகமான பக்கத்தையும் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் சர்வதேச அரசியலில் இனப்படுகொலை என்ற ஒன்றையே முதன்மையாக முன்வைக்க வேண்டும். அதே நேரத்தில் போர் கூற்றம்ம் என்பதை ஆதாரப்படுத்தவும் வேண்டும்.

சர்வதேச நீதி விசாரணைக்கு சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெறுவதற்கும் ஆதாரங்கள் முக்கியமானவை. ஆதாரங்களை திரட்டுவதில் தமிழர் தரப்பு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. அதே நேரத்தில் தமிழர் தரப்பின் கருத்து மண்டலத்தில் சர்வதேசத்துக்கு எல்லாம் தெரியும் என்ற கருத்தியலே மேலோங்கியும் உள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் 20 நாடுகளின் பங்களிப்பு இலங்கை அரசுக்கு இருந்தது என்று கூறுவது சர்வதேச அனுசரணையை எமக்கு பெற்றுத் தராது. மாறாக நாம் சர்வதேச எதிர்ப்பு வாதம் பேசுகிறோம் என்பதையே வெளிப்படுத்தும்.

இதனையே தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் தம்மை அறியாமல் அண்டை நாட்டு எதிர்ப்பு வாதம், சர்வதேச எதிர்ப்பு வாதமும் என்ற இரண்டையும் தமிழர்களின் கருத்து மண்டலத்தில் விதைத்து விட்டுள்ளனர். இதனையே பொதுவான பார்வையில் சர்வதேச அவதானிப்பாளர்கள் தமது நாடுகளுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பர்.

ஐக்கிய நாடுகள் சபை  

இந்நிலையில் அண்டைநாடே, சக்தி வாய்ந்த நாடுகளோ, அல்லது வல்லமை வாய்ந்த நாடுகளோ தமிழ் மக்களுக்கு சார்பாக எப்படித் தமது கருத்துக்களையோ ஆதரவினையோ முன் வைப்பர்? இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் தமது அரசியல் கருத்தையும் கருத்துருவாக்கத்தையும் மிகக்கவனமாக முன்வைக்க வேண்டியது அவசியமானது. வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு பின்னான காலத்திலும் ஐநா மன்றுக்கு செல்வோம் என்ற குரல்கள் தமிழ் மக்களிடமிருந்து ஓயாது ஒலிக்கிறது.

தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! | Sri Lankan Tamils Sri Lanka Political Content

ஆயினும் ஐ.நா மன்றம் என்பது ஒரு தேசிய இன விடுதலையை ஆதரிக்கும் அமைப்பல்ல. அது தேசிய இனங்களுக்கான அமையமுமல்ல. அது உலகின் 196 நாடுகளின் அரசுகளுக்கான அமையும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ஐநா மன்றம் நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளை பேசுகின்ற அமைப்பை அன்றி அது தேசிய இன பிரச்சினைகளுக்குள் மூக்கு நுழைக்கின்ற ஒரு அமைப்பு அல்ல.

தேசிய இனங்கள் பிரிந்து செல்வதை ஆதரிக்கும் அமைப்புமல்ல. ஆயுத ரீதியாக போராடி தமது தாயக நிலத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள தேசிய இனங்களை சுயநிர்ணய அடிப்படையில் அவர்களுடைய தாயகத்தை தனிநாடாக ஐநா மன்றம் அங்கீகரித்து உறுப்பு நாடாக இணைத்ததும் கிடையாது. இந்த அடிப்படையில் தமிழ் மக்களின் கனவுலக ஐ.நா மன்றத்தையும், ஐ.நா மனிதவுரிமை ஆணையம் என்ற ஒப்பாரி மண்டபத்தையும் தமிழ் மக்கள் நம்பி தமது அரசியலை முன்னெடுக்க முடியாது.

ஆகவே ஐ.நா வுக்கூடாக தமிழ் மக்கள் தமது போராட்டத்தை எந்த வழிகளில் முன்னெடுக்கலாம் என்பது பற்றி பார்ப்பதும் அவசியமானது. ஒரு தேசிய இனம் போராடி அடக்குகின்ற நாட்டின் அரசியல் அதிகாரத்தில் இருந்து பிரிந்து “ஒரு நாடு” கோரி ஐ.நாவில் சேர்வதற்கு வேண்டிய சர்வதேச சட்ட நடைமுறை எத்தகையது? இது ஆழமான, சட்டரீதியான முக்கியமான கேள்வி.

இதற்கு மனவிருப்புக்கள், கொள்கைகள், உணர்ச்சி ஆர்ப்பரிப்புக்களை கடந்து நமது நோக்குநிலையில் அல்லாது சர்வதேச சட்டம் (International Law)மற்றும் நடைமுறைகள் என்ன சொல்கிறது என்பதே முக்கியமானது. அதன் அடிப்படையிலேயே ஒழுங்கு முறைமைக்குட்பட்டு கட்டமைப்பு ரீதியில் சர்வதேச வேலை திட்டத்தை முன்னெடுப்பது அவசியமானது.

இங்கே முதலாவதாக ஈழத் தமிழர்கள் அறிய வேண்டிய முக்கிய உண்மை என்னவென்வெனில் ஐநா என்பது ஒரு நாட்டை சுயமாக உருவாக்காது, உருவாக்கப்பட்ட நாட்டை தானாக உறுப்பினராக ஏற்கவும் மாட்டாது. 

இனப்படுகொலைக்கான தீர்வு

ஐநாவில் சேர வேண்டிய சர்வதேச சட்ட நடைமுறை பொதுவாக 5 படிமுறை கட்டங்கள் கொண்டது. சுய நிர்ணய உரிமை அடிப்படையில் (Self-Determinatio) ஐநா உறுப்புரை 1 இரண்டாம் பந்தியும்(UN Charter – Article 1(2) மற்றும் ICCPR / ICESCR – Article 1 உறுப்புரையும்“ஒரு மக்கள் கூட்டத்திற்கு தங்கள்அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிக்க உரிமை உண்டு” என்கிறது. ஆனால் இது தானாகவே பிரிவினை கோரும் உரிமை அல்ல.

முதலில் உள் சுயாட்சி(Internal self-rule). கூட்டாட்சி(Federalism) சுயாட்சி(Autonomy) என்ற பேரம் பேசுல்களைத் தாண்டி இத்தகைய அரசியல் எதுவும் தேசிய இனத்திற்கு ஒத்துவரவில்லை அல்லது நிராகரிக்கப்படுகின்ற நிலையிலேயே தேசிய இனம் தனியாகப் பிரிந்து செல்கின்ற முடிவுக்கு வரவேண்டும். பிரிவினை(Secession) என்பது அடக்கப்படுகின்ற தேசிய இனத்திற்கு அடக்குகின்ற அரசினால் அல்லது அரசுக்குள் ஒரு தீர்வு எட்டப்படமுடியாது என்ற கடினமான சூழ்நிலையில் எடுக்கப்பட்ட கூடிய இறுதி நடவடிக்கையக, கடைசி விருப்பம் தனி நாடாக மட்டுமே அமைய முடியும். இது இனப்படுகொலை என்பது நிரூபிக்கப்படும் பட்சத்திலும் இனப்படுகொலைக்கான தீர்வு தனி நாடு என்பதாகவே அமைய முடியும்.

பிரிவினை(Secession) என்பது மிகவும் முக்கிய கட்டம். ஒரு தேசிய இனம் பிரிவினை கோர சட்ட நியாயம் பெற வேண்டுமென்றால், கீழ்கண்டவை நிரூபிக்கப்பட வேண்டும்

1)தொடர்ச்சியான அடக்குமுறை

2)அரசியல் பிரதிநிதித்துவம் மறுப்பு

3)மொழி / கலாச்சாரம் / இன ஒடுக்குமுறை

4)மாற்று தீர்வுகள் அனைத்தும் தோல்வி என்ற நிலையில் மாற்றுப் பிரிவினை(Remedial Secession) என்ற உடன்படிக்கைக்கு(Doctrine) செல்ல முடியும். இதற்கு நடைமுறை உதாரணமாக தென்சூடான், கிழக்கு தீமோர் என்பவற்றை குறிப்பிட முடியும். உண்மை நடைமுறை ரீதியான ஆட்சி அதிகார அலகு கொண்ட ஒரு நாடு உருவாகியுள்ளது என்பதை நிரூபிக்க Montevideo Convention (1933) உள்ள 4 அளவுகோல்கள் சொல்லப்படுகிறது அவை யாவை

1)நிரந்தர மக்கள் (Stable population)

2)வரையறுக்கப்பட்ட நிலம் (Defined territory)

3)செயல்படும் அரசு (Effective government)

4)வெளிநாட்டு உறவுகள் )Capacity to enter relations)

இந்த நான்கு அம்சங்களையும் அந்த நடைமுறை அரசியல் நிர்வாகம் கொண்டிருக்க வேண்டும். இதற்கு பின்னர்தான் ஐநாவில் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க முடியும். அத்தோடு குறித்த மக்கள் கூட்டத்திடம் நடாத்தப்படும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு(Referendum) என்பது பலம் சேர்க்கவல்லது. ஆனால் அரசியல் ஒழுங்கு என்ற ரீதியாக பாதிக்கப்பட்ட அல்லது அடக்கப்படும் மக்களிடம் தமக்கு “நாடு வேண்டுமா?” என்று விருப்பினை சுதந்திரமான வாக்கெடுப்பு ஒன்றை சர்வதேச கண்காணிப்பு குழு ஒன்றின் மேற்பார்வையில் நடாத்தி அவர்களின் பெருவிருப்பினை நிரூபித்து இருந்தால் அது மிகவும் பலம் சேர்க்கும்.

இதற்கு தென்சூடான் நடைமுறை உதாரணம். அதேபோல சோமாலிலாண்ட் மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு என்பவற்றை குறிப்பிடலாம். அரசுகளின் அங்கீகாரம்(Recognition by States) இருக்கவேண்டியது மிகவும் அவசியமானது. ஐநாவுக்கு விண்ணப்பிக்க முன்னர் சில நாடுகள் சுய ஆட்சி கோறும் மக்கள் கூட்டத்தின் அரசியல் நிலப்பரப்பை தனிநாடாக முதலில் அங்கீகரிக்க வேண்டும். அந்த அங்கீகாரம் என்பது நடைமுறை(De facto) வாயிலாகவோ அல்லது சட்டப்படியாகவோ(De jure) மேற்கொண்டதாக இருக்கவேண்டியது அவசியம். அதற்காக உலகின் எல்லா நாடுகளும் ஒரே நேரத்தில் அங்கீகரிக்க வேண்டியதில்லை.

இதற்கு நல்லதொரு உதாரணம் தற்போது சோமாலேண்ட் தனி நாட்டு கோரிக்கையை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடலாம். தற்போது சோமாலிலாண்ட் ஐ.நா உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்கின்ற தகுதியை பெற்றுள்ளது. இவ்வாறு ஐந்து கட்டங்களை தாண்டித்தான் இறுதியாக ஐ.நாவின் உறுப்புரிமை பெறுவதற்கான இறுதிக்கட்டத்தை நெருங்க முடியும். அதனை இறுதி ஐநா உறுப்பு உரை பந்தி4 (UN Charter –Article 4) நடைமுறை விதிகளுக்கு அமைய புதிய நாடு ஒன்று ஐநா உறுப்புரிமைக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

இன விடுதலை

அவ்வாறு விண்ணப்பிக்கின்ற போது அதனை பாதுகாப்புச் சபை(Security Council) பரிசீலனை செய்யும். பாதுகாப்புச் சபை பையில் 20 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். அதில் ஐந்து இரத்து அதிகார நாடுகளின் உறுப்பினர்களும் அடங்குவர் இந்த ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும் ஏனைய 15தும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் அடைந்து செல்லும். பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரம் உள்ள ஒரு நாடு நிராகரித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விடும். இரத்து அதிகாரம் பயன்படுத்தப்படாமல் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டால் அதன் பின்னர் பொதுச் சபையில்(General Assembly) 2/3 பெரும்பான்மை ஆதரவைப் பெற்றால் குறிப்பிட்ட தனி நாடு கோரி விண்ணப்பித்த நாடு ஐ.நா உறுப்புரிமை பெற்றுவிடும். மேற்குறிப்பிட்ட ஒழுங்கு முறையை தாண்டி ஒரு நாடு ஐநா அங்கீகாரம் பெறுவது என்பது இன்றைய சூழமைல் இலகுவானது அல்ல.

தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! | Sri Lankan Tamils Sri Lanka Political Content

பெரும்பாலான நாடுகள் பிராந்திய ஒருமைப்பாடு(Territorial integrity) என்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள். பெரும் சக்திகளின் ஆதரவு (Big Power backing) இருக்க வேண்டும். பலம் வாய்ந்த நாடுகளின் ஆதரவின்றி எந்த ஒரு தேசிய இனமும் விடுதலை பெற முடியாது. ஆகவே தேசிய இன விடுதலைக்கான நிபந்தனையில் அண்டை நாடுகள், அல்லது பிராந்திய சக்தி வாய்ந்த நாடுகள், அல்லது பலம் பொருந்திய நாடுகளின் ஆதரவின்றி தேசிய இன விடுதலை ஒருபோதும் இனிவருங் காலத்தில் ஒருபோதும் சாத்தியமில்லை என்பதை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய இனங்களின் விடுதலையில் இரத்து அதிகாரம் (veto) அதிகாரம் உள்ள நாடுகளின் அரசியல் நலன்கள், பல்தேசிய இனங்களைக் கொண்ட பெரிய நாடுகளின் ஒருமைப்பாடு மற்றும் ஆபிரிக்க ஒன்றியம், ஆசியன் அமைப்பு போன்ற பிராந்திய கூட்டமைப்புகளின் பார்வையில் பிரிவினைகள் அந்தப் பிராந்திய உறுதியற்ற தன்மை(Regional instability) ஏற்படுத்தும் என்ற அச்சம் என்பன தனிநாடு கோரும் தேசிய இனங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைக்கிறது. இத்தகைய பின்னணியில் சோமாலிலண்டை (Somaliland) இந்த கட்டத்தில் வைத்து பார்த்தால் அவர்களிடம் சுய நிர்ணய உரிமை ஸ்தாபிக்கப்பட்டு விட்டது.

தனியாகப் பிரிந்து செல்லல் என்பது அவர்களின் உறுதி முடிவாக உள்ளது. ஆயினும் சர்வதேச மட்டத்தில் அது விவாத பொருளாகியுள்ளது. அவர்களுடைய தாயகம் அதாவது வரையறுக்கப்பட்ட நிலம் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது அத்தோடு அவர்கள் 2001 ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை(Referendum) நடத்தி மக்களின் விருப்பை வெளிப்படுத்தியும் விட்டனர். ஆயினும் அவர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் இல்லை. தற்போதுதான் இஸ்ரேல் மாத்திரமே அங்கீகரித்துள்ளது.

ஆயினும் அது அமெரிக்காவின் ஆதரவு உண்டு என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் ஐநா உறுப்புரிமை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்று விட்டனர் என்ற அடிப்படையில் சோமாலேண்ட் தனி நாடு ஆவது சட்ட ரீதியாக சாத்தியம். ஆனால் சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் நிலைமைகளினால் சோமாலேண்ட் அரசியல் ரீதியாக முன்னேறிச் செல்வது கடினமான பாதையாகவே தொடர்ந்தும் இருக்கும். உலகில் 20 மேற்பட்ட தேசிய இனவிடுதலை இயக்கங்கள் தனிநாடு கோரி போராடுகின்றன.

இவ்வாறு போராடுகின்ற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கயை யாரும் அங்கீகரிக்காமல் அவை பேரழிவுகளை சந்தித்தும் தொடர்ந்து போராடுகின்றன. அந்த வகையில் தற்போது இறுதியாக சோமாலிலாண்ட் இஸ்ரேலினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சோமாலிலாண்ட் அமைவிடம் சார்ந்தும் அதை எதிர்கொண்ட பிராந்திய அரசியல் படிப்பினைகளிலிருந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒப்பீடு செய்து பார்த்தால் தற்போது நாம் எங்கு இருக்கிறோம் என்பதை உணர முடியும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தற்போது எம்மிடம் என்ன இருக்கிறது? நாம் போராட்டத்தை பாதுகாக்கவில்லை, மக்களை பாதுகாக்கவில்லை, நிலத்தை பாதுகாக்கவில்லை, போராட்ட இயக்க சக்தியை பாதுகாக்கவில்லை. ஆக ஒட்டுமொத்தத்தில் தமிழரிடம் மிஞ்சி இருப்பது பேர் இழப்பு ஒன்று மட்டுமே. இந்த நிலையில் ஐநாவும், சர்வதேச சட்டமும் இன்று தமிழீழத்தை “முடிந்த போராட்டம்” என்று சொல்லவில்லை, “மாறிய வடிவப் பிரச்சினை” என்றும் “அடக்கப்பட்ட போராட்டம், ஆனால் தீர்க்கப்படாத தேசிய பிரச்சினை“ என்று பார்க்கிறது.

இத்தகைய போக்கின் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களுக்கான பிரிவினையை(secession) ஐநா பேசவில்லை. அது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம்(Accountability & reconciliation) என்பதை மட்டுமே பேசுகிறது. இதனை தமிழ் அரசியல் கட்சிகளும், சில புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் பேசுகின்றன, வலியுறுத்துகின்றன.

இத்தகைய காரணங்களினால் இயங்குநிலையில் உள்ள பிரிவினை கோறும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட பட்டியலில் தற்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் இல்லை என்ற சர்வதேச பொது அபிப்பிராயம் தோன்றிவருகிறது என்பதையும் இலகுவில் மறந்துவிட முடியாது. இது தமிழீழ விடுதலை போராட்டத்தின் நியாயத்தை மறுப்பதாக எடுத்து விடக்கூடாது மாறாக இது சர்வதேச சட்ட–அரசியல் நிர்ணய போக்குகளின் நிலையை பிரதிபலிக்கிறது என்பதாகவே ஈழத்தமிழர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழீழம் ஈழத்தமிழரின் தேசியக் கனவு மட்டும் அல்ல அது ஒரு வரலாற்று நிர்பந்தம். அந்த கனவை எப்படி இன்றைய சர்வதேச அரசியல் போக்குகளுக்கூடாக சாத்தியமான அரசியலாக மாற்றுவது, அதற்காக சீரழிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தை ஐக்கியப்படுத்துவதே எம்முன்னேயுள்ள மிகப்பெரும் சவாலாகும் என்பதே இறுதியிலும் உறுதியான உண்மை.

ஈழத்தமிழர்கள் தமது கொள்ளளவுக்கு மிஞ்சி தியாகத்தையும், மக்களையும் பலி கொடுத்திருக்கிறோம். தமிழர் தாயகத்தின் இந்துசமுத்திர கேந்திரத்தானத்தை வைத்துக்கொண்டு பார்த்தால் ஈழத் தமிழர்களுக்கான தமிழீழம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்று விட்டது.

ஆனால் இந்துமா சமுத்திர அரசியலுக்கான தமிழீழம் இன்றும் சாத்தியமாகவும், என்றும் சாத்தியப்படக்கூடிய ஒன்றாகவே உள்ளது. இதனை முதலீடாக வைத்துக்கொண்டு இந்துமா சமுத்திர தமிழீழ விடுதலைக்கான சர்வதேச அரசியலில் வெற்றிகரமாக பயணிப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு. ஆகவே தமிழிழ விடுதலைக்கான வெளியுறவுக் கொள்கையை உடனடியாக வகுத்து செயல்படுவதையே இன்றைய காலத்தின் தேவையாகும்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments