ஈழதேசம் கண்ட கண்ணீரில் மாண்டுவிடாது மீண்டெழுந்த கிளிநொச்சி வட்டக்கட்சியைச் சேர்ந்த சாதனைப்பெண் ராஜினி சந்திரசேகரம் பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளராகி சாதனை படைத்துள்ளார்.

சிறைச்சாலையில் பிறந்து இன்று உலகப்புகழ் பெற்ற பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று அங்கு விரிவுரையாளராக கடமையாற்றும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார். 

இவர் கடந்துவந்த பாதை இவ்வாறு அமைந்துள்ளது, அது மிகக் கடினமான காலம். தாயகத்தில் போர் நடைபெற்ற காலத்தில் இவள் பிறந்தாள்.

சிறைச்சாலைச் சுவர்கள்

வன்முறை, அச்சம் மற்றும் நிலை தடுமாறும் வாழ்க்கை சூழலில், இவளின் பெற்றோர் வேதனையோடு ஒரு முடிவை எடுக்க வேண்டி இருந்தது. பிறக்கவிருந்த தங்கள் குழந்தையை போரின் கொடூரத்திலிருந்து காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் காந்தி தேசத்தில் தஞ்சம் கோரினர்.

அங்கு பாதுகாப்பும் புதிய எதிர்காலமும் கிடைக்கும் என்று நம்பி, ஆனால் பாதுகாப்புக்கு பதிலாக சிறைச்சாலையே அவர்களை எதிர்கொண்டது. அந்த சிறைச்சாலைச் சுவர்களுக்குள் தான் ராஜினி சந்திரசேகரம் பிறந்தாள்.  

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகி ஈழத்தமிழ்ப் பெண் சாதனை | Sl Tamil Woman Becomes Lecturer At Cambridge Unive

இவளின் முதல் மழலையொலி மகிழ்ச்சியின் சின்னமாக இல்லாமல் தடுப்புக்கம்பிகளின் பின்னால் பெரும்போராட்டத்தின் மத்தியில் எழுந்த நம்பிக்கையின் சின்னமாக இருந்தது.

அந்த கடினமான சூழலில் பிறந்தாலும், அவளின் பிறப்பு பெற்றோரின் உறுதியையும் எதிர்கால நம்பிக்கையையும் பிரதிபலித்தது. இவளின் தந்தை   போராட்டத்தில் பங்காற்றியதன் மீதமாய் உடலில் பலகாயங்களுடன் அவரது தலையில் சன்னங்களும் பதிந்திருந்தன. அதன் காயங்கள் அவரது உடலையும், குடும்பத்தின் வாழ்க்கையையும் தினந்தோறும் பாதித்தன.

சிறைவாசத்திலிருந்து விடுதலையான பிறகும், அந்த காயங்களின் விளைவுகள் தொடர்ந்தன. பின்னர் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் நாடினர். புதிய வாழ்க்கையை தொடங்குவோம் என்ற நம்பிக்கையுடன் சென்றாலும், பொருளாதார சிரமங்கள், கலாச்சார மாற்றங்கள் மற்றும் மன உளைச்சல்கள் அவர்களை சோதித்தன.

இங்கிலாந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சையால் அந்தசன்னங்களை அகற்றினாலும் அதன் விளைவாக தொடர்ந்தும் (seizures) அதன் தாக்கங்கள் காணப்பட்டன. எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் அந்த வலி உபாதைகள் குடும்பத்தின் அமைதியை குலைத்தன.

அறிவியல் சாதனை

சிறுமியாக இருந்த இவள் தந்தையின் நிலையை வாழ்வின் அனேகமான நாட்களாக கவனித்தாள். அச்சம், கவலை, உதவியற்ற மனநிலை இவை அனைத்தும் இவளின் உள்ளத்தில் கேள்விகளை எழுப்பின.

“இது ஏன் நடக்கிறது? இதைத் தடுக்க முடியாதா? மனித மூளை எப்படி செயல்படுகிறது? அந்த கேள்விகளே இவளின் எதிர்காலத்தை நிர்ணயித்தன. மூளையின் செயல்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உறுதியுடன், இவள் கல்வியில் முழுமையாக ஈடுபட்டாள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகி ஈழத்தமிழ்ப் பெண் சாதனை | Sl Tamil Woman Becomes Lecturer At Cambridge Unive

உலகப் புகழ்பெற்ற University of Cambridge பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி நரம்பியல் (Neuroscience) துறையில் தீவிரமாகப் படித்தாள். பத்து ஆண்டுகள் கடின உழைப்பும் ஆராய்ச்சியும் மேற்கொண்டு தனது வாழ்க்கை அனுபவங்களை அறிவியல் சாதனையாக மாற்றிக் கொண்டாள். இவளின் விடாமுயற்சி மற்றும் அறிவாற்றலால் நரம்பியல் துறையில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்று கெளரவிக்கப்பட்டாள்.

மேலும் தனது ஆய்வுகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை தொகுத்து கேம்பிரிட்ஜ் நூலகத்திற்காக ஒரு முக்கியமான அறிவியல் நூலையும் எழுதியுள்ளார். அந்த நூல் மூளை மற்றும் நரம்பியல் குறித்த ஆழமான புரிதலை வழங்கும் கல்வியின் ஆதாரமாக விளங்குகிறது.

பின்னர், University of Cambridge அவளுக்கு விரிவுரையாளர் ஆக இருந்து அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கற்பிக்கும் வாய்ப்பையும் வழங்கியது.

சிறைச்சாலையில் பிறந்த குழந்தை, உலகின் முன்னணி பல்கலைக்கழகத்தில் அறிவைப் பகிரும் நிலைக்கு உயர்ந்தாள். போரிலும் துன்பங்களிலும் அடக்கு முறையிலும் தொடங்கிய இந்த வாழ்க்கைப் பயணம் அறிவியல் சாதனையிலும் சமூகப் பெருமையிலும் நிறைவடைந்தது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments