யாழில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்புயாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, களுவத்துறை பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் பணிப்பெண் ஒருவரின் ஊடாக பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளுடன் தொடர்பில்லை
இன்றையதினம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் பல தடவைகள் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது அயலவர்கள் அங்கு சென்று பார்த்த போது தீயில் கருகிய நிலையில் சடலமாக காணப்பட்டார். சடலத்துக்கு அருகில் இரண்டு மண்ணெண்ணெய் கொள்கலன்கள் காணப்பட்டன. அவற்றில் ஒன்று முழுமையாக தீர்ந்திருந்தது.வீட்டின் உள்ளே உள்ள மின்விசிறியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு, அறுக்கப்பட்டும் காணப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை
இது குறித்து வட்டுக்கோட்டை காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வட்டுக்கோட்டை காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
