அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான ஈரானின் வியூகங்கள் மற்றும் 14 அம்சத் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ஈரான் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. ஈரானின் இந்தப் போர்த் திட்டத்தின் முதல் கட்டம், அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக, தெற்கு லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், அது ஹிஸ்புல்லா மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளின் நலன்களுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
14 அம்சத் திட்டங்கள்
இதற்கு முன்னதாக இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போதும், லெபனான் போர் நிறுத்தத்திற்குப் பிறகே ஈரான் அடுத்த கட்டத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் தற்போது ஒரு புதிய சூழல் உருவாகியுள்ளதாக ஈரான் கூறுகிறது.
இந்தத் தற்காப்பு நீரிணை தற்போது ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அமெரிக்கா தன் மீதான கடல்வழித் தடையை (Blockade) நீக்கினால் மட்டுமே, தான் கொண்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயார் என ஈரான் தெரிவித்துள்ளது.
மீண்டும் போர் தொடங்காது என்பதற்கும், எதிர்காலத்தில் இத்தகைய சூழல் ஏற்படாது என்பதற்கும் சர்வதேச அளவில் தகுந்த உத்தரவாதங்களை ஈரான் கோரியுள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்ட பின்னரே, மிகவும் சிக்கலான அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்த 14 அம்சத் திட்டம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
