ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தை நாடும் பயணிகளின் கவனத்தை குரோஷியா நாட்டில் அமைந்துள்ள கடலடி அருங்காட்சியகம் வெகுவாக ஈர்த்துள்ளது.
குரோஷியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ட்ரோகிர் நகருக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்ட தனித்துவமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

என்ன சிறப்பு?
கிறிஸ்தவ மதத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாதையை (Stations of the Cross) சித்தரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடலின் சுமார் 4 மீட்டர் ஆழத்தில் பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9 மீட்டர் ஆழத்தில் இயேசு கிறிஸ்துவின் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டிருப்பது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. கடலின் தெளிந்த நீருக்குள் இந்த சிற்பங்களை நேரில் காணும் அனுபவம், சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் அதன் குறைந்த ஆழமாகும். இதனால், நீச்சல் தெரியாதவர்கள்கூட ஸ்னோர்க்லிங் (Snorkelling) உபகரணங்களின் உதவியுடன் பாதுகாப்பாக கடலுக்குள் சென்று சிற்பங்களை ரசிக்க முடியும்.
இதற்கான பாதுகாப்பு வசதிகளும் வழிகாட்டுதல்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், குளிர்ச்சியான கடல் சூழலை அனுபவிப்பதற்கும், வித்தியாசமான கலாச்சார மற்றும் ஆன்மிக அனுபவத்தை பெறுவதற்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த கடலடிப் அருங்காட்சியகத்தை நோக்கி வருகை தருகின்றனர்.
