ஈரானிய மக்கள் ஒருபோதும் அதிகார அடக்குமுறைக்குப் பணிய மாட்டார்கள் என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே அடிப்படை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று அவநம்பிக்கை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அமெரிக்கா மீது ஈரானுக்கு ஆழமான வரலாற்று அவநம்பிக்கை இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, சமீபகாலமாக அமெரிக்க அதிகாரிகளின் ஆக்கபூர்வமற்ற மற்றும் முரணான அணுகுமுறைகள், நிலைமையை மேலும் சிக்கலாக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் கடந்த கால நடத்தைகள் காரணமாகவே இந்த அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மசூத் பெசெஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அமெரிக்காவின் செயல்பாடுகள் ஒரு கசப்பான செய்தியைச் சுமந்து வருவதாகவும் அமெரிக்கா உண்மையில் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை, மாறாக ஈரானின் சரணாகதியையே எதிர்பார்க்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
ஈரானிய இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் எவ்வித அழுத்தங்களுக்கும் நாடு தலைவணங்காது என்பதை அவர் தனது பதிவில் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
