இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வாவை உடனடியாகப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எழுந்த கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதன்படி, ஷம்மி சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்கிரமரத்ன தலைமையில் புதிய இடைக்காலக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ICC அனுமதி
கடந்த எட்டு ஆண்டுகளாக அரசியல் செல்வாக்கு மற்றும் முறைகேடான அதிகாரப் பலத்தின் மூலம் தலைவர் பதவியில் நீடித்துவந்த ஷம்மி சில்வா, தற்போது தனது பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல் நிறைந்த நிர்வாக மாற்றத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ICC) அறிவித்துள்ளதாகவும், இது ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதால் அதற்கு ICC அனுமதி வழங்கியுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
நிதி முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்ததாக ஷம்மி சில்வா மீது கடந்த காலங்களில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி அநுரவின் வாக்குறுதி
குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலுக்கு ஷம்மி சில்வா விவகாரமே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னிணியில், ஓய்வுபெற்ற நீதியரசர்கள் மற்றும் தணிக்கையாளர் நாயகத்தின் பல விசாரணை அறிக்கைகள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பாரிய மாற்றத்தைக் கோரியிருந்த நிலையில், தற்போது அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தமது தேர்தல் வாக்குறுதிக்கமைய அரச நிறுவனங்களைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனாதிபதி இதனைச் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக ஷம்மி சில்வா ஜனாதிபதியிடம் ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
