பாரிஸில் பொலிஸாரை  கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி (Bobigny) நகரில் நேற்று (30) அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய நபர் ஒருவர், பொலிஸாரையும் தாக்க முற்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச்சூடு

அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்டை வீட்டாருக்கு இடையே மோதல் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பிராந்திய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

பொலிஸார் வருவதைப் பார்த்த அந்த நபர், தனது இரண்டு கைகளிலும் தலா ஒரு கத்தியை ஏந்தியபடி ஆக்ரோஷமாக அவர்களை நோக்கி வந்துள்ளார். ஆபத்தை உணர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், முதலில் அந்த நபரைத் தன் காலால் உதைத்துப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இருப்பினும் அந்த நபர் மீண்டும் அதிகாரிகளை நோக்கிக் கத்தியுடன் பாய்ந்துள்ளார். வேறு வழியின்றித் தற்காப்புக்காக அந்த அதிகாரி தனது அரசுத் துப்பாக்கியால் அந்த நபரின் வயிற்றுப் பகுதியில் குறைந்தது இரண்டு முறை சுட்டுள்ளார்.

படுகாயமடைந்த அந்த நபருக்கு அவசர மருத்துவப் படையினர் சம்பவ இடத்திலேயே தீவிரச் சிகிச்சையளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கத்திக்குத்தில் காயமடைந்த அவரது அண்டை வீட்டார் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்துப் பொபினி அரசு வழக்கறிஞர் (Parquet de Bobigny) அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments