எழுச்சி பாடல்களை அனைத்தும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களாகக் கருதுவது சரியானதா! நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் பாடப்பட்ட பாடல் மற்றும் அதனுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சொல்லிசை காணொளி தொடர்பாக ஒரு இளைஞன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, “எழுச்சி பாடல்” என்ற அடையாளம் கொண்ட பாடல்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட அல்லது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவை என்ற பார்வை மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தக் காலத்தில் தமிழர் சமூகத்தில் உருவான பாடல்களின் உலகம் மிகவும் பரந்தது. அவற்றில் சில பாடல்கள் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்திருக்கலாம்.

ஆனால் அதே காலகட்டத்தில் காதல், பக்தி, கலாசாரம், தாயக நினைவுகள், இடம்பெயர்வு, மனித இழப்புகள், போரால் ஏற்பட்ட வலிகள் மற்றும் சமூக உணர்வுகளை வெளிப்படுத்திய ஏராளமான பாடல்களும் உருவாகியிருந்தன.

இன்று வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு இசை நிகழ்வுகளில் பாடப்படும் பாடல்களில் குறிப்பிடத்தக்க பகுதி, மக்கள் அனுபவித்த துயரங்களையும் நினைவுகளையும் பதிவு செய்த கலைப் படைப்புகளாகவே உள்ளன.

அவற்றை அனைத்தையும் ஒரே கோணத்தில் பார்த்து, ஒரு குறிப்பிட்ட அமைப்பின் பிரசாரப் பாடல்களாக வகைப்படுத்துவது வரலாற்றையும் கலைச் சுதந்திரத்தையும் மிக எளிமைப்படுத்தும் அணுகுமுறையாகும்.

குறிப்பாக எழுச்சி பாடல்களை அனைத்தும் விடுதலைப்புலிகள் பாடல்களாகக் கருதுவது சரியானதா என ஆர்வளர்கள் தமது ஆதங்கங்களை முன்வைத்துள்ளனர்.

Advertisement

கலைஞர்கள் பலரும் தாங்கள் பாடுவது பிரிவினைவாதத்தையோ வன்முறையையோ ஊக்குவிக்கும் பாடல்கள் அல்ல என்றும், மாறாக ஒரு சமூகத்தின் அனுபவங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் படைப்புகள் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒரு பாடலில் தாயகம், மொழி, இனம் அல்லது மக்களின் துன்பங்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெறுவதால் மட்டுமே அது பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கருதப்பட முடியாது என்பதும் அவர்களின் வாதமாகும்.

ஒரு ஜனநாயக சமூகத்தில் கலை மற்றும் கருத்து வெளிப்பாட்டிற்கான இடம் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு பாடல் சட்டவிரோதமானதா அல்லது வன்முறையைத் தூண்டுகிறதா என்பதை அதன் உள்ளடக்கம், நோக்கம் மற்றும் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டுமே அன்றி, “எழுச்சி பாடல்” என்ற பெயரின் அடிப்படையில் மட்டும் தீர்மானிக்கக் கூடாது.

எனவே, எழுச்சி பாடல்களை அனைத்தையும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களாகக் கருதும் கண்ணோட்டம் வரலாற்று உண்மைகளையும் கலைப் பரிமாணங்களையும் புறக்கணிக்கும் ஒரு பொதுமைப்படுத்தலாகும்.

Advertisement

கலை மற்றும் அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகளை கவனமாகப் புரிந்துகொண்டு, கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்ட நடைமுறையாக்கம் ஆகிய இரண்டுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவது அவசியமாகிறது.

இது குறித்த தெரிய வருகையில், 

எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞன் பகிர்ந்திருந்தார்.

Advertisement

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை இளைஞனை கைது செய்து விசாரணைகளின் பின், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இளைஞன் சார்பில் முன்னிலையான சட்டதரணி நீண்ட சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்த போதிலும், பிணை வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு , நடைபெற்ற இசை நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சொல்லிசை கலைஞனான இளைஞன் பக்தி பாடல்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.

தான் இசை நிகழ்வில் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு , ஏற்கனவே தனது இசை சேர்க்கையில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து , அதனை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

குறித்த பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து , தென்னிலங்கையில் பலரும் கடுமையான விமர்சனங்களையும் , இனவாத கருத்துக்களையும் முன் வைத்தனர். இந்நிலையில் , குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை, பாடலை பாடிய கிளிநொச்சியை சேர்ந்த இளைஞனை கைது செய்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காவல் நிலையத்தில் தடுத்து வைத்து இளைஞனை தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்போது ஆலய திருவிழாக்கள் பல இடங்களிலும் நடைபெற்று வரும் நிலையில் , திருவிழாக்களில் நடைபெறும் மேள கச்சேரி மற்றும் இசை நிகழ்வுகளில் தாயக எழுச்சி பாடல்கள் இசைக்கப்படுவது மற்றும் பாடப்படுவது தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதன்படி அவை தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உரும்பிராய் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற இசை நிகழ்வில் தாயக பாடல்களை பாடிய குற்றச்சாட்டில் தாயகத்தின் புகழ் பூத்த பாடகரான மறைந்த பாடகர் எஸ்.ஜி சாந்தனின் மகனான கோகுலன் உள்ளிட்ட இருவரை கோப்பாய் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisement

யுத்தம் நடைபெற்ற கால பகுதியில் தாயகத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் , தமிழீழ விடுதலைப் புலிகளிகள் அமைப்பு சார்ந்த பாடல்கள் அல்ல என்பதை சமூக ஆர்வளர்கள் விளக்கி வருகின்றனர்.

அக்கால பகுதியிலும் காதல் பாடல்கள் , பக்தி பாடல்கள் , யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புக்கள் வலிகளை கூறும் பல பாடல்கள் வெளிவந்தன. அவற்றினையே படுகிறோம். பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பாடல்களை நாம் பாடவில்லை என பாடகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments