கொலைகளும் துப்பாக்கிகளும் தெற்கில் – இராணுவப்பட்டாளம் வடக்கில் சமகால அரசியல் மற்றும் பாதுகாப்புப் போக்குகளைக் கூர்ந்து அவதானிக்கும் எவருக்கும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு பாரிய மூலோபாய முரண்பாடும், திட்டமிட்ட இனவாதச் சூழ்ச்சியும் அப்பட்டமாகத் தெரியவரும்.

தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்களின் கொடூரக் கொலைகளும், போதைப்பொருள் கடத்தல்களும் நாளுக்கு நாள் உச்சமடைந்து, சட்டம் ஒழுங்கு என்பது முழுமையாகச் சீர்குலைந்து போயுள்ளது.

ஆனால், சிறிலங்கா அரசோ துப்பாக்கிக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்த வேண்டிய இராணுவப் பலத்தை, முற்றுமுழுதாகப் போரோ அல்லது ஆயுத வன்முறையோ இல்லாத ஈழத்தமிழ் மக்களின் தாயகப் பூமியில் நிலைநிறுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமிப்பதற்கான ஒரு கருவியாகவே இந்த இராணுவம் இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அநீதியான இராணுவ மயமாக்கலுக்கு எதிராக ஈழத்தமிழர் தரப்பிலிருந்து எழும் தொடர்ச்சியான எதிர்ப்புகளைத் தட்டிக்கழித்துவரும் சிங்கள பௌத்த பேரினவாதம், தனது சொந்த நிலப்பரப்பில் பாதாள உலகச் சாம்ராஜ்யம் செழித்து வளருவதற்கு வழிவகுத்துள்ளது.

தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்பு

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்றரை தசாப்தத்திற்கும் மேல் கடந்துவிட்ட நிலையிலும், ஶ்ரீலங்கா அரசு தனது இராணுவப் பலத்தையோ, அதற்கான பாதுகாப்புச் செலவீனங்களையோ குறைக்கத் தயாராக இல்லை.

முப்படைகளும் சிவில் பாதுகாப்புப் படைகளும் சேர்த்து, ஏறத்தாழ 2,50,000 முதல் 3,00,000 வரையான ஆயுதமேந்திய ஆளணியை இலங்கை பாதுகாப்பி தரப்பு இன்னமும் கொண்டுள்ளது.

Advertisement

இதில் இராணுவம் மாத்திரமே சுமார் 1,50,000 முதல் 1,80,000 வரையான சிப்பாய்களைக் கொண்டுள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புகளின் ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, இலங்கையின் மொத்த காலாட்படைப் பிரிவுகளில் அறுபது சதவீதத்திற்கும் அதிகமான படைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே இன்னமும் நிலைகொண்டுள்ளன.

அதிலும் குறிப்பாக வடக்கின் சில பகுதிகளில் ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து குடிமக்களுக்கும் ஒரு இராணுவச் சிப்பாய் என்ற வீதத்தில், சர்வதேச அளவில் அதிர்ச்சியூட்டும் மிக மோசமான விகிதாசாரத்திலேயே இந்த இராணுவக் குவிப்பு நீடித்து வருகிறது.

பாதாள உலகப் போர்க்களம் 

மறுபுறம், கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட தென்னிலங்கையின் பிரதான நகரங்கள் இன்று பாதாள உலகக் குழுக்களின் போர்க்களங்களாக மாறியுள்ளன.

நாளாந்தம் நடக்கும் பகிரங்கத் துப்பாக்கிச் சூடுகள், கப்பம் கோரல் மற்றும் படுகொலைகள் சாதாரணமாகிவிட்டிருப்பதோடு, தெற்குக் கடல் பிராந்தியமும் அதன் கடற்கரைகளும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர மையங்களாக மாறியுள்ளன.

சிவில் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாத இந்த ஆயுதமேந்திய பாதாள உலகக் குழுக்களையும், சமூகத்தை அழிக்கும் போதைப்பொருள் மாஃபியாக்களையும் ஒடுக்க வேண்டியதே ஒரு நாட்டின் பாதுகாப்பின் அவசரத் தேவையாக இருக்க வேண்டும். ஆனால், அங்கு சட்டம்-ஒழுங்கு முழுமையாகத் தோற்றுப்போயுள்ளது.

பௌத்தமயமாக்கப்படும் தமிழர் நிலங்கள்

எவ்வித ஆயுதப் போராட்டமோ அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தலோ இல்லாத வடகிழக்கில், மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் இந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

இவர்கள் மக்களின் பாதுகாப்பிற்காக அங்கு இல்லை மாறாக, அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக தமிழர் தேசத்தின் நிலங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள், குடியிருப்புகள், கடற்கரைகள் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் இராணுவத்தின் பிடியில் உள்ளன.

இராணுவம் அங்கு உல்லாச விடுதிகளையும், விவசாயப் பண்ணைகளையும் நடத்தி வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement

இதுபோதாதென்று, அண்மைக்காலமாக தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக, இராணுவப் பாதுகாப்போடு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும், வழிபாட்டு இடங்களான குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, குச்சவெளி, மூதூர், மத்தளமலை போன்ற பகுதிகள் திட்டமிட்டு சிங்கள பௌத்தமயமாக்கப்பட்டு வருகின்றன.

ஈழத்தமிழரின் நியாயமான கேள்வி

இப்போது ஈழத்தமிழர் தரப்பிலிருந்து எழும் நியாயமான கேள்வி இதுதான் தெற்கில் உள்ள பாதாள உலகக் கொலையாளிகளையும், போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் ஒடுக்க வக்கற்ற சிறிலங்கா அரசிற்கு, வடகிழக்கில் தமிழ் மக்களின் காணிகளைப் பிடுங்குவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதற்கும் மட்டும் ஏன் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவம் தேவைப்படுகிறது?

Advertisement

இந்த மூலோபாயம் தேசிய பாதுகாப்புச் சார்ந்தது அல்ல மாறாக இது தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கும், நிலங்களை ஆக்கிரமித்து இனவிகிதாசாரத்தை மாற்றுவதற்கும் அரசு தொடர்ச்சியாகப் பேணிவரும் ஒரு திட்டமிட்ட அரசியல் இராணுவவாதம் ஆகும்.

வடக்கிலிருந்து இராணுவம்

புள்ளிவிபரங்களின்படியும் சமூக யதார்த்தங்களின்படியும், இப்போதைக்கு இராணுவம் தேவைப்படுவது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள தெற்கிற்கே தவிர, அமைதியாக இருக்கும் வடக்கிற்கு அல்ல.

எனவே, சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயக மண்ணிலிருந்து உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற வேண்டும் இது வெறும் ஈழத்தமிழர்களின் கோரிக்கை மட்டுமல்ல சர்வதேச மனித உரிமை விதிகளின்படியும், உண்மையான நீதிக்கும் வழிவகுக்கும் ஒரே வழியாகும்.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை முழுமையாக விடுவித்து, படைகளைத் தெற்கிற்கு நகர்த்துவதே ஒட்டுமொத்த தீவிற்கும் பாதுகாப்பானது.

Advertisement

அதை விடுத்து, தொடர்ந்தும் படைகளை வடக்கு-கிழக்கில் நிலைகொள்ள வைத்து, நிலங்களை அபகரித்து, திட்டமிட்ட சமூகச் சிதைவுகளை ஏற்படுத்த சிங்கள ஆட்சியாளர்கள் முற்படுவார்களாயின், அவர்கள் விதைத்த வினையை அவர்களே அறுவடை செய்ய நேரிடும்.

தெற்கில் ஏற்கனவே வெடித்துள்ள சமூக, பொருளாதாரப் பேரழிவுகள், இந்த இனவாத இராணுவவாதத்தால் இன்னும் பன்மடங்கு தீவிரமடையும். சிங்கள தேசம் தமக்குள்ளான ஒரு பாரிய கட்டமைப்புச் சிதைவை எதிர்கொண்டு, மிகப்பெரும் உள்முரண்பாடுகளால் தன் சொந்த அழிவின் விளிம்பை நோக்கியே நகரும் என்பதுதான் தற்போதைய மறுக்க முடியாத வரலாற்று யதார்த்தமாகும்.

பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் பா.பிரியங்கன் அவரால் எழுதப்பட்டு, 08 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments