நடிகை த்ரிஷா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒரு பிரபல வர்த்தக நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா, சிட்னி நகரத்துடனான தனது இனிய அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். முதலில் ஆங்கிலத்தில் பேசிய அவர், “என்னுடைய வேலை காரணமாக உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.
அந்த வகையில் சிட்னியும் எனக்கு மிகவும் பிடித்த நகரங்களில் ஒன்று. சிறு வயதிலேயே இங்கு வந்திருக்கிறேன். இந்த நகரத்துடன் எனக்கு நிறைய அழகான நினைவுகள் உள்ளன.
மேலும், இந்த முறை இங்கு வந்தபோது அதிகளவில் இந்தியர்களையும் இலங்கையர்களையும் பார்க்க முடிந்தது. அதைப் பார்க்கும்போது, சொந்த வீட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி
இதற்கிடையில், ரசிகர்கள் “தமிழில் பேசுங்கள்” என்று ஆரவாரம் எழுப்பியதைத் தொடர்ந்து, த்ரிஷா தனது உரையை தமிழில் தொடர்ந்தார். அப்போது அவர், “எனக்கு இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும்.
ஆனால் அந்த உச்சரிப்பில் பேச வராது. சென்னைத் தமிழ் தான் நன்றாக வரும். இங்கு தமிழ், தெலுங்கு என அனைவரும் ஒன்றாக கலந்து இருந்ததால் முதலில் ஆங்கிலத்தில் பேசினேன். உங்களுடைய தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது.

இப்படிப்பட்ட தமிழை சென்னையில்கூட அதிகமாகக் கேட்க முடியாது. இங்கு மிகவும் சுத்தமான தமிழை பேசுகிறீர்கள் என்று தோன்றுகிறது” என்று கூறியதும், அரங்கில் இருந்த ரசிகர்கள் பலத்த கைதட்டலுடன் வரவேற்றனர்.
அதேவேளையில், ரசிகர்கள் மத்தியில் இருந்த ஒருவர் “விஜய் சார் பற்றி சொல்லுங்கள்” என்று உரக்கக் குரல் எழுப்பினார். ஆனால் அந்தக் குரல் த்ரிஷாவுக்கு தெளிவாகக் கேட்காததால், அதற்கு எந்தவிதமான பதிலும் கொடுக்காமல் தொடர்ந்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் காணொளிகளும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக, இலங்கைத் தமிழைப் பாராட்டிய த்ரிஷாவின் பேச்சு இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
