மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கைதிகள் கூண்டுக்குள் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
கைதியின் இந்த சம்பவம் நீதிமன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது
யாழ்ப்பாணத்தில் கைது
3 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் பிணையில் வெளிவந்தவர் வழக்கிற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததையடுத்து கடந்த 13 ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15 ம்திகதி முற்படுத்தியதையடுத்து அவரை இன்றையதினம் (20ம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இன்று திங்கட்கிழமை (20) காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டார்
