உலகில் அரசியல் தீர்மானங்கள் ஒரு காலகட்டத்துடன் மாத்திரம் மறைந்துவிடுவதில்லை. ஈழச் சூழலில் தமிழ் மக்களின் உரிமை வேண்டிய பயணத்தில் இனப்படுகொலைகள் ஆழமான நினைவதிர்வுகளை வரலாறு முழுவதும் உண்டுபண்ணியுள்ளது என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலமான இன்றைய காலம் தக்க சான்றாய் நிற்கிறது.

அதேபோல ஈழத் தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது இலங்கை இனப்பிரச்சினையின் உண்மையான முகத்தை வரலாற்றின் தடத்தில் ஆழமாக பதித்து பல பாடங்களைச் சொல்லி மீள்கிறது.

அரசியல் தோல்வியால் வந்த தீர்மானம்

கடந்த 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி  வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 14.05.2026ஆம் நாளுடன் அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.

மித வாத அரசியலில் தமிழ் தரப்புக்கள் சந்தித்த தோல்விகள் மற்றும் அனுபவங்களால்  தனித் தமிழீழம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு நகர்ந்தமையே வட்டுக் கோட்டைப் பிரகனடம் என வரலாற்றில் நிகழ்ந்தேறியது.

தந்தை செல்வநாயகம் தலையில் கூடிய மாநாட்டில்,

01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.

02. அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.

03. அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

தமிழ் அரசை மீளளித்தல்

ஒரு தேசிய இனத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழீழ அரசை மீளளித்தல் மற்றும் மீள உருவாக்குதல் என்ற காரணத்தை இந்த தீர்மானம் கொண்டிருந்தது.

இலங்கை 1948இல் சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட, அதற்காக 38 ஆண்டுகள் இலங்கை அரசுகளுடன் பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் இடம்பெற்ற நிலையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம், தமிழர் விடுதலைப் போராட்டத்தில் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுவே ஆயுதப் போராட்டத்திற்கும் அடிதளமிட்ட நிகழ்வாகும்.

சுமார் நாற்பது வருடங்களாக மதிவாத அரசியலில் சந்தித்த தோல்விகளும் இலங்கை அரசின் உறுதியான தமிழர் ஒடுக்குமுறைச் செயற்பாடுகளும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டன.

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐம்பது ஆண்டுகளை அண்மிக்கின்றபோதும் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது என்பதே இந்தத் தீர்மானத்தை இன்னும் உயிர்ப்பிக்கிறது.

மக்கள் வழங்கிய ஆணை

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பேராதரவளிக்கும் முகமாக வடகிழக்கு தமிழ் மக்கள் பெரும் எழுச்சியோடு தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட தமது பிரதிநிதிகளை வெல்ல வைத்தார்கள்.

தனித் தமிழ் ஈழத்திற்கான ஆணையை அந்த தேர்தலில் வடகிழக்கு மக்கள் முன்வைத்தார்கள். அதனை ஒரு ஜனநாயகப் போராட்டமாக மேற்கொண்டார்கள்.

பிரிந்து செல்லல் மாத்திரமின்றி சாதியற்ற, பண்பாடு, பாரம்பரிய விழுமியங்களை பாதுகாக்கும், சம உரிமை கொண்ட ஒரு தேசத்தையே வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிரதிபலித்தது.

ஒரு இனம் ஒடுக்குமுறையை சந்திக்கின்றபோது, ஜனநாயகம், அதன் சுய உரிமைகள் மறுக்கப்படுகின்றபோது, அந்த இனம் பிரிந்து சென்று தனக்கான ஆட்சியை அமைக்க உரித்துடையது என்பதை அனைத்துலக மக்கள் சார்ந்த உரிமைக் கொள்கைகள் ஏற்றுக்கொள்கின்றன.

இலங்கைத் தீவில் பூர்வீகமாக வாழந்த தமிழ் தேசிய இனம் இத்தகைய ஒரு தீர்மானத்திற்கு செல்லுகின்றது எனில் அது எத்தகைய ஒடுக்குமுறையை சந்தித்தது என்பதையே இங்கு புரிந்துகொள்ளப்ட வேண்டியது. ஆனால் ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசியலில் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் துரதிஷ்டமானது.

தனிநாடு கோரிய போராட்டம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, இலங்கை அரசுகள் காலந்தோறும் கடுமையாக விமர்சிப்பதன் அர்த்தம் என்பது அதன் பின்னாலுள்ள உண்மைகளையும் நியாங்களைளும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேட்கையையும் ஏற்கத் தயாரில்லை என்பதேயாகும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், ஓர் கடுமையான தீர்மானமாக கூறும் அரசுகள் என்ன தீர்வைத்தான் தமிழ் மக்களுக்கு வழங்கின? தமிழ் மக்களின் சுய உரிமை குறித்த பிரச்சினைக்கு – இலங்கையில் புரையோடிப் போன இனப்பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் இதுவரையில் முன் வைக்காதது ஏன்? இதனைக் கடுமையான தீர்மானம் என்பதும் இதனை நிராகரிப்பதும் சுய உரிமை மறுப்புக்கான, பேரினவாத அதிகாரப் போக்கின் வெளிப்பாடே.

வட்டுக்கோட்டைத் தனித் தமிழீழ தீர்மானத்தின் பின்னர், ஆயுதம் ஏந்தி தனி நாடு கோரி நடத்தப்பட்ட தீர்மானத்தின் பின்னர், 13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு சமஸ்டி ஆட்சிமுறையைக் கோரி பல தடவைகள் ஈழத் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.

சமஷ்டித் தீர்வு பிரிவினையல்ல என்றும் வடகிழக்கை பூர்வீககமாகக் கொண்ட தமிழ் இனம் தன்னுடைய இறைமையை, இழந்த ஆட்சியை கோருவது அந்த இனத்தின் உரிமை என்றும் தமிழ் தலைமைகள் வலியுறுத்தி வந்தன.

அத்துடன் சமஷ்டி ஆட்சிமுறையே தமது இலக்கு என்றும் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் தமிழ் தலைமைகள் மக்களிடத்தில் உறுதி வழங்கியுள்ளன.

தமிழ் ஈழத்திற்கும், தயாரில்லை, மகிந்த ஆட்சியில் 13இற்கும் தயாரில்லை, இப்போது சமஷ்டிக்கும் தயாரில்லை என்றால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக எதைத்தான் முன்வைப்பீர்கள்? தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டென்று பெரும்பாலான சிங்கள மக்கள்,சிங்கள முற்போக்காளர்கள் ஏற்றுக்கொண்டனர் தானே.

எதைக் கொடுக்கவும் தயாரில்லையா?

ஆனால் ‘தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டோம்’ எனும் பேரினவாத ஆட்சியில் இங்கு வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியானதாய் இருக்கும்? எழுபது வருடங்காக போராடும் ஒரு இனம் எத்தகைய நிலையை அடையும்? முப்பது வருடங்களாக ஆயுதம் ஏந்திய இனம் எதனை உணரும்? இவைகளை குறித்து இலங்கையை ஆள்பவர்களும் நாமும் உலகமும் சிந்திக்க வேண்டும்.  

இப்போதும் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து அவர்களை கடுமையான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இன்றும் அற்ப விடயங்களைக்கூட பேரினவாத ஆயுதப்பார்வை கொண்டு அணுகிறது அரசு. உப்புப் பையிற்கு பெயர் வைப்பதில்கூட தமிழை வஞ்சிக்கிறது அனுர தரப்பு.

ஆக்கிரமிப்பும் இனப்படுகொலைக்கான நீதிமறுப்பும் தொடர்கிறது. இன்னொரு நாட்டைப் போல சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கையும் தமிழ் இனத்தையும் மொழியையும் அழுத்துகிறபோது வட்டுக்கோட்டைத் தீர்மானங்கள் இங்கு இன்னும் உயிர்ப்பில்தான் இருக்குமல்லவா?  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments