தீவிரமடைந்து வரும் ‘பாவி’ புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் ‘இண்டாய்’ என்று அழைக்கப்படும் இந்த புயல், நாட்டின் மீது நேரடியாகக் கரையை கடக்காது என்ற போதிலும், அதன் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியான மிண்டனாவோ தீவின் சரங்கனி மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாவி புயல் எதிரொலி: பிலிப்பைன்சில் கோர நிலச்சரிவு - 15 பேர் உயிரிழப்பு | Bavi Massive Landslide In The Philippines 15 Dead

மேலும் லானாவோ டெல் சூர் மாகாணத்தில் நிகழ்ந்த மற்றொரு நிலச்சரிவில் 5 பேர் பலியாகியுள்ளனர். புயலின் தீவிரத்தன்மை காரணமாகத் தலைநகர் மணிலா உட்படப் பல பகுதிகளில் கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கையை அந்நாட்டின் வானிலை ஆய்வு மையமான PAGASA விடுத்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளைச் சூறையாடிய இந்த சூப்பர் புயல், தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

பலத்த மழை

சனிக்கிழமையன்று தாய்வானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், ஜப்பானின் கடலோரப் பகுதிகளிலும் பலத்த மழையைக் கொட்டவிருக்கும் இப்புயல், அதன்பின் சீனாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாவி புயல் எதிரொலி: பிலிப்பைன்சில் கோர நிலச்சரிவு - 15 பேர் உயிரிழப்பு | Bavi Massive Landslide In The Philippines 15 Dead

இதனால் தாய்வானில் முன்னெச்சரிக்கையாகப் பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த வாரம் ‘மேசாக்’ புயல் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கால் சீனாவில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த புதிய புயல் ஆசியப் பிராந்தியத்திற்கு மேலும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments