கிளிநொச்சி – இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா பண்ணையில் நடைபெறவிருந்த மாபெரும் உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டதற்கான காரணத்தை, நிர்வாகத் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
மாபெரும் உணவுத் திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே திட்டமிடப்பட்டு, ஊடகங்கள் வாயிலாகவும் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, கடந்த 7, 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நான்கு நாட்கள் உணவுத் திருவிழா நடைபெறவிருந்தது. எனினும், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக, குறித்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உணவுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு செலுத்தப்பட்ட பணம் மீள வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த குழப்ப நிலையை ஏற்படுத்தியவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கத்தை றீச்சா பண்ணையின் நிர்வாகத் தலைவர் கந்தையா பாஸ்கரன் காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
