வீதிகளில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் சாரதிகள் மீது, சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்காமல், நேரடி நீதிமன்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல்துறை போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி காவல்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (26) வரை, நாட்டில் 1,292 வீதிவிபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,357 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கான முக்கிய காரணம்
மேலும், இதே காலகட்டத்தில் 2,512 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் மற்றும் 5,059 பேர் சிறு விபத்துகளில் சிக்கியுள்ளனர். இந்த விபத்துகளில் 467 பாதசாரிகளும் 465 இருசக்கர வாகன ஓட்டிகளும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகளின் அதிவேகம் மற்றும் பொறுப்பற்ற ஓட்டும் முறைகளே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்று பிரதி காவல்துறை மா அதிபர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் இரண்டு பகுதிகளில் நிகழ்ந்த பேருந்து விபத்துகளில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Advertisement
இரண்டு நாளில் இரண்டு பாரிய விபத்துகள்
கொழும்பிலிருந்து பதுளைக்குச் சுமார் 60 பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து பேருந்து ஒன்று, இன்று (27) அதிகாலை 1.10 மணியளவில் தியதலாவ தொடருந்து நிலையம் அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தின் பிரேக்குகள் செயலிழந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

Advertisement
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 42 பேர் காயமடைந்து தியதலாவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; அவர்களில் 6 பேர் பெண்கள். படுகாயமடைந்த ஒருவர் பதுளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தியதலாவ ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதேபோல், நேற்று மாத்தறை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், சுமார் 40 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
