வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் ஊடக அடக்குமுறைகள் தொடர்வதாகவும் இதற்கு சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரே முழுமையான காரணம் என்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர்கள் வன்மையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, உப தவிசாளர் தயாபரன் தலைமையில் நேற்று (01-07-2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது சபையில் ஊடகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
கடுமையான நிபந்தனைகள்
இதனால் சபையில் நீண்ட வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
சபை அமர்வைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்த விபரங்களை வெளியிட்டனர்.

Advertisement
இதனடிப்படையில் மேலும் தெரிவித்த அவர்கள், “இலங்கை வெகுஜன ஊடக அமைச்சின் ஊடக அடையாள அட்டை வைத்துள்ள பூ.லின்ரன் என்ற ஊடகவியலாளரைத் தவிர வேறு எந்தவொரு உள்ளூர், சுயாதீன அல்லது நிறுவன ஊடகவியலாளர்களையும் சபை அமர்வில் கலந்துகொள்ள தவிசாளரும் செயலாளரும் அனுமதிக்கவில்லை.
சபை அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர் லின்ரனுக்கும் பல்வேறு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஊடக அடக்குமுறைகள்
குறிப்பாக ஊடகவியலாளருக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு எங்கும் சென்று காணொளிகளைப் (Video) பதிவு செய்யக் கூடாது என்ற முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள் மீதான இந்த ஊடக அடக்குமுறை வெளிப்படையாகவே அரங்கேறி வருகிறது இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
Advertisement

இவ்வாறான ஊடக அடக்குமுறைகள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்த விடாமல் தடுக்கும் இந்தச் செயலுக்கு எதிராகப் பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
இந்த ஊடக விவகாரம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
